Published : 08 Jul 2024 05:06 PM
Last Updated : 08 Jul 2024 05:06 PM

ஜாபர் சாதிக்கின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல: உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாதம்

ஜாபர் சாதிக் | கோப்புப்படம்

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சாதிக் தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தியதாக, திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் கடந்த மார்ச் 9-ம் தேதி கைது செய்தனர். அதைத் தொடர்ந்து தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தன்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால், தன்னை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்த அமலாக்கத் துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், போதைப் பொருள் கடத்தல் வழக்குக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தன் மீது தவறான உள் நோக்கத்துடன் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தன்னை சட்டவிரோதமாக கைது செய்ததை சட்டப்பூர்வமாக்கும் வகையில் அமலாக்கத் துறையினர் திஹார் சிறையில் உள்ள தனக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கைதுக்கான வாரண்ட் பெற்றுள்ளது என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ், “சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்ததற்கு எதிராக ஜாபர் சாதிக் தாக்கல் செய்துள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவே அதுதொடர்பான வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும்” என வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x