Published : 08 Jul 2024 06:25 AM
Last Updated : 08 Jul 2024 06:25 AM

செங்கை அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து: ஐ.டி. ஊழியரின் மனைவி, மகள் உயிரிழப்பு

ரஞ்சினி, மனஸ்வினி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, தாழம்பூர் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவரும் சுதர்சன் (37), இவரது மனைவி ரஞ்சினி (36) இருவரும் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு சாத்விகா (10), மனஸ்வினி (7) என இரு மகள்கள்.

மதுராந்தகம் அருகே இவர்களுக்கு சொந்தமான மாட்டுப் பண்ணைக்கு சுதர்சன் தனது குடும்பத்துடன் காரில் சென்றுவிட்டு நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இவர்களின் காருக்கு முன்னே ஆம்னி பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.

செங்கல்பட்டு அருகே பழவேலி பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவன பேருந்து ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக நின்று கொண்டிருந்தது. அதன் மீது ஆம்னி‌ பேருந்து திடீரென மோதி நின்றது.

பின்னால் சென்ற சுதர்சன் காரை உடனடியாக நிறுத்த முடியாததால் ஆம்னி பேருந்தின் மீது மோதினார். அப்போது இவர்களுக்கு பின்னால் வந்த லாரி ஒன்று இவர்களின் கார் மீது மோதியது. அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின.

இதில் காரில் பயணம் செய்த ரஞ்சினி மற்றும் மகள் மனஸ்வினி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். சுதர்சன் மற்றும் சாத்விகா ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு தாலுக்கா போலீஸார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் நொறுங்கிய காரில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சிக்கிக்கொண்டன. போலீஸார், தீயணைப்புத் துறையினர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பல மணி நேரம் போராடி உடலை மீட்டனர். உயிரிழந்தவர்களின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.

இந்த விபத்தால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. நள்ளிரவுக்கு மேல் போக்குவரத்து சீரானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x