Published : 08 Jul 2024 06:08 AM
Last Updated : 08 Jul 2024 06:08 AM

சென்னையில் 23-வது மகளிர் கார் பேரணி: விதவிதமான உடைகளில் வலம் வந்த பெண்கள்

இந்தியன் ஆயில் நிறுவனம், டச்சஸ் கிளப் சார்பில் மகளிர் கார் பேரணி சென்னை மயிலாப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில், சவேரா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் நீனா ரெட்டி, இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் எஸ்.எம்.வைத்தியா, நடிகர் அருண் விஜய், நடிகை சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சென்னை: சென்னையில் நடைபெற்ற கார் பேரணியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் விதவிதமான உடைகளில் பங்கேற்றனர். இந்தியன் ஆயில் நிறுவனம், டச்சஸ் கிளப் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மகளிர் கார் பேரணி, சென்னையில் ‘மெட்ராஸ் - மெட்ராஸ்’ என்ற மையக் கருத்துடன் நேற்று நடைபெற்றது.

மயிலாப்பூரில் உள்ள சவேரா ஓட்டல் வளாகத்தில், 23-வது கார்பேரணியை ஓட்டல் நிர்வாக இயக்குநர் நீனா ரெட்டி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.வைத்யா, செயல் இயக்குநர் எம்.சுதாகர், நடிகர் அருண் விஜய், நடிகை சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

100 கார்கள் பங்கேற்பு: இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்ட கார்கள் பங்கேற்றன. போட்டி விதிகளின்படி ஒவ்வொருகாரிலும் மொத்தம் 4 பேர் இருந்தனர். ஒருவர் காரை ஓட்ட, மற்றொருவர் வழிகாட்டியாக இருந்தார். மற்ற இருவரும் கொடுக்கப்பட்ட விநாடி-வினா போட்டிக்கான விடைகளை தேடினர். 30-40கி.மீ. வேகத்தை தாண்டக் கூடாது.

ஜிபிஎஸ் கேமரா செயலி மூலம்செல்லும் இடங்களின் புகைப்படத்தை அனுப்புவது உள்ளிட்டகட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. பல குழுக்கள் தங்கள்குடும்பத்தினருடன் பேரணியில்பங்கேற்றனர். இதில் கலந்துகொண்ட பெண்கள் ‘மெட்ராஸ் - மெட்ராஸ்’ என்ற கருத்துக்கு ஏற்ப,மடிசார் புடவை, வேட்டி சட்டை,ஆட்டோ ஓட்டுநரின் சீருடை என விதவிதமான உடைகளை அணிந்தபடி காரை ஓட்டினர்.

போட்டி தொடங்கி சுமார் 2.30மணி நேரத்தில் 50-65 கி.மீ. தூரம் பயணித்து, சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு சென்ற பேரணி, மீண்டும் சவேரா ஓட்டலை வந்தடைந்தது. போட்டியில் 7 பிரிவுகளின்கீழ் வெற்றி பெற்ற முதல் 3 கார்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x