Published : 07 Jul 2024 09:19 AM
Last Updated : 07 Jul 2024 09:19 AM

விக்கிரவாண்டியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக - நாம் தமிழர் கட்சியினர் மோதல்

விக்கிரவாண்டி அருகேயுள்ள தொரவி கிராமத்தில் மோதலில் ஈடுபட்ட திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர்.

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக, நாம் தமிழர் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு, போலீஸார் முன்னிலையிலேயே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சியினர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட தொரவி, பனையபுரம், அசோகபுரி உள்ளிட்டஇடங்களில் திறந்தவெளி வாகனத்தில் வாக்குச் சேகரித்த நாம் தமிழர்கட்சி வேட்பாளர் அபிநயா, எதிர்திசையில் ஏராளமான பெண்களுடன் வாக்குச் சேகரித்தபடி வந்த திமுகவினரையும், அவர்களுடன் சென்ற பெண்களையும் பார்த்து சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

“ஒரு நாள் அவர்கள் கொடுக்கும் 500, 1,000 பணத்துக்காக ஏன்இப்படி வந்து தெருவில் நிற்கிறீர்கள்? உங்களை எல்லாம் பார்த்தால், அறியாமையில் நின்று கொண்டிருப்பதாகத்தான் தெரிகிறது. கள்ளச் சாராய மரணங்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்? பணத்தை வாங்கிக் கொண்டு திமுகவினருடன் சென்றால், அந்த பாவம் உங்கள் பிள்ளைகளுக்கு வந்து சேரும்” என்று நாதக வேட்பாளர் அபிநயா பேசினார். இதனால் அவர் மீது திமுகவினர் கடும் கோபத்தில் இருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தொரவி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதற்காக, 100-க்கும் மேற்பட்டதிமுகவினர் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்தவழியாக பிரச்சாரம் செய்தபடி வந்த நாம் தமிழர் கட்சியினர், வழக்கம்போல திமுகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி, திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பிரச்சாரம்செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர், நாம் தமிழர்கட்சியினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, மோதலாக மாறியது. இரு தரப்பினரும் போலீஸார் முன்னிலையில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். தொடர்ந்து, மோதலில் ஈடுபட்ட திமுக, நாம் தமிழர் கட்சியினரை தடுத்து நிறுத்திய போலீஸார், இரு தரப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

மோதல் தொடர்பாக திமுக, நாம் தமிழர் கட்சி தரப்பில் யாரும் புகார் அளிக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x