Published : 06 Jul 2024 05:24 AM
Last Updated : 06 Jul 2024 05:24 AM

கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவது ஏன்?- அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் என்னும் அதிகதொகையை எப்படி இழப்பீடாக வழங்க முடியும் என சென்னைஉயர் நீதிமன்றம் கேள்விஎழுப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த ஜூன் 18, 19-ம் தேதிகளில்கள்ளச் சாராயம் குடித்து 65 பேர்உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் பெரும்பாலானோருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னையை சேர்ந்த முகமது கோஸ்என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருந்ததாவது:

சாராயம் குடிப்பது சட்டவிரோத செயல். அதனால், சாராயம் குடித்துஉயிரிழந்தவர்களை பாதிக்கப்பட்டவர்களாக கருத முடியாது. அவ்வாறு கருதவும் கூடாது. தீப்பிடித்தல் போன்ற விபத்துகளில் உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு குறைந்த இழப்பீட்டு தொகையை அரசு வழங்குகிறது. ஆனால், கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு எந்த அடிப்படையில் அதிக தொகை இழப்பீடாக வழங்கப்படுகிறது என்பது குறித்து பொதுமக்களுக்கு அரசு தெளிவுபடுத்தவில்லை.

கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகளோ, சமூக சேவகர்களோ, சமூகத்துக்காக உயிர் தியாகம் செய்தவர்களோ இல்லை. அவர்களுக்கு இழப்பீடாக தலா ரூ.10 லட்சம் வழங்குவதை ஏற்க முடியாது. எனவே, இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மறுபரிசீலனை செய்ய முடியுமா?- பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம்இழப்பீடு என்பது அதிகம். இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினர். இந்த இழப்பீட்டு தொகையை குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய முடியுமா? என்று அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x