Published : 06 Jul 2024 05:40 AM
Last Updated : 06 Jul 2024 05:40 AM

முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்தின் சொத்துகளை பறிமுதல் செய்ய தடையில்லை: ஐகோர்ட்

முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் | கோப்புப் படம்

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை மற்றும் அவரது சொத்துகள் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கடந்த 1991 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பதவி வகித்தவர் சி.அரங்கநாயகம். இவர் தனது பதவி காலத்தில், தனது பெயரிலும், மனைவி கலைச்செல்வி, மகன்கள் சந்தான பாண்டியன், முருகன் அதியமான் ஆகியோரது பெயரிலும், வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.15 கோடி சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்சஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை 2006-ம் ஆண்டு தாக்கல்செய்யப்பட்டது. இந்நிலையில், வழக்கை விசாரித்த சிறப்புநீதிமன்றம், சி.அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், பதவிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்துகளை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்று 2017 ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. மேலும், இந்த வழக்கில் அமைச்சரின் மனைவி மற்றும் அவரது இருமகன்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அரங்கநாயகம் தரப்பிலும், அவரது மனைவி, மகன்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்று வந்தது.இதற்கிடையே, 2021-ல் அரங்கநாயகம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி நேற்று, முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதிசெய்யப்படுகிறது.

அவர் காலமாகிவிட்டதால், வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துகளைபறிமுதல் செய்ய வேண்டும் என்றஉத்தரவு உறுதி செய்யப்படுகிறது. அதேநேரத்தில், அவரது மனைவி மற்றும் மகன்களின் விடுதலையை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x