Published : 06 Jul 2024 05:25 AM
Last Updated : 06 Jul 2024 05:25 AM

ராயப்பேட்டையில் மெட்ரோ ரயில் பணிக்காக துர்கையம்மன் கோயில் ராஜகோபுரத்தை இடிக்க கடும் எதிர்ப்பு

சென்னை: சென்னை ராயப்பேட்டை, ஒயிட்ஸ் சாலையில், பிரசித்தி பெற்ற 250 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த ஸ்ரீதுர்கையம்மன் கோயில் உள்ளது. தற்போது அப் பகுதிகளில் நடந்து வரும் மெட்ரோ ரயில் பணிக்காக அந்தக் கோயிலின் ராஜகோபுரத்தையும், அக்கோயில் அருகே உள்ள ஸ்ரீரத்தின விநாயகர் ஆலயத்தையும் இடிக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்தது.

கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் இதற்கான நடவடிக்கையைத் தொடங்கியபோது, அப்பகுதி மக்கள், பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கோயில் இடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை கோயிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதில், ஜூலை 3-ம் தேதி கோயில் ராஜகோபுரம் மற்றும் விநாயகர் கோயிலைஇடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டி ருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளர், திருவல்லிக்கேணி சரக உதவி ஆணையரை சந்திக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. இறுதியில் காவல் ஆய்வாளரைச் சந்தித்து முறையிட்டனர்.

இந்நிலையில், கோயிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் போலீஸாரால் மிரட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைக் கண்டித்தும், கோயில் ராஜகோபுரத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தும், இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் நேற்று முன்தினம் கோயில் முன் திரண்டு போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்து திருவல்லிக் கேணி சரக உதவி ஆணையர் அழகு தலைமையிலான போலீஸார்விரைந்து வந்து போராட்டக்காரர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, கோயிலைஇடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து இந்து அமைப்பினர்கூறும்போது, ‘‘மெட்ரோ ரயில் பணிக்காக துர்கையம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடதுபக்க நிலம்கொடுக்கப்பட்டுள்ளது. கோயிலை இடிக்காமல் அருகே உள்ள தனியார்நிலத்தை கைப்பற்றி மாற்று பாதையில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கலாம். மாறாக, கோயில் ராஜகோபுரம் மற்றும் ஸ்ரீரத்தின விநாயகர் கோயிலை இடித்தே தீருவோம் என மெட்ரோ நிர்வாகத்தினர் உறுதியாக உள்ளனர்.

மேலும், மாநில அரசு ஒப்புதல் அளித்த இடம் வழியாகத்தான் மெட்ரோ ரயிலுக்கான வழித்தடத்தை அமைத்து வருகிறோம் என்கின்றனர். இந்த விவகாரத்தில் தமிழகஅரசு மவுனமாக இருக்கிறது. எனவே, கோயில்கோபுரத்தை இடிப்பதில் தமிழக அரசு உறுதியாகஉள்ளதுபோல் தோன்றுகிறது. பொதுமக்களிடம் பணம் திரட்டி கோயில்கோபுரம் கட்டப்பட்டுள் ளது. எனவே, இதை இடிக்க விடமாட்டோம்’’ என்றனர்.

ரமேஷ்

இந்த விவகாரம் குறித்து துர்கையம்மன் கோயில் வாசலில் பூக்கடை அமைத்திருக்கும் ரமேஷ் என்பவர் கூறுகையில், ‘கோயில் இடிப்பை எப்படியாவது தடுக்க வேண்டும். இந்த அம்மன்மிகவும் சக்தி வாய்ந்த அம்மன். எனவே, நாங்கள் தெய்வத்தை நம்புவதை தவிர வேறு ஒன்றும் எங்கள் கையில் இல்லை’ என வேதனையுடன் தெரிவித்தார்.

இதற்கிடையே, இக்கோயிலின் ராஜ கோபுரத்தையும், ஸ்ரீரத் தின விநாயகர் ஆலயத்தையும், மெட்ரோ பணிகளுக்காக இடிக்க திட்டமிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x