Published : 05 Jul 2024 12:48 PM
Last Updated : 05 Jul 2024 12:48 PM

ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலமோசடி புகார்: சிபிசிஐடி போலீஸார் சோதனை @ கரூர்

கரூர் அருகேயுள்ள மணல்மேடு தாளப்பட்டியில் உள்ள யுவராஜ் வீடு.

கரூர்: கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலமோசடி புகார் தொடர்பாக 4 பேர் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலி சான்றிதழ் கொடுத்த ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிவு செய்தாக யுவராஜ், பிரவீண், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 9-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இவ்வழக்கில் தானும் சேர்க்கப்படலாம் என்பதால் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் 12-ம் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை 3 முறை ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 25-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

கரூர் அருகேயுள்ள மணல்மேடு தாளப்பட்டியில் உள்ள யுவராஜ் வீட்டில் சோதனை நடத்தும் சிபிசிஐடி போலீஸார் வந்த வாகனம்.

இதற்கிடையில் சார்பதிவாளர் அளித்த நில மோசடி புகார் வழக்கு ஜூன் 14-ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. மேலும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நில உரிமையாளர் ஷோபனாவின் தந்தை பிரகாஷ் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக ஜூன் 22-ம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீண் உள்ளிட்ட 13 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வாங்கல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் சிகிச்சையின்போது உடனிருக்கவேண்டும் எனக்கூறி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் கேட்டு ஜூலை 1-ம் தேதி மனு தாக்கல் செய்தார். அவரது முன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.

கரூர் அருகேயுள்ள மணல்மேடு தாளப்பட்டியில் உள்ள யுவராஜ் வீட்டில் சோதனை நடத்தும் சிபிசிஐடி போலீஸார் பாதுகாப்புக்காக தாலுகா மற்றும் ஆயுதப்படை போலீஸார் வந்துள்ள வாகனம்.

இந்நிலையில் சார் பதிவாளர் அளித்த புகாரில் இடம்பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வரும் யுவராஜின் மணல்மேடு தாளப்பட்டி வீட்டில் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் 4 சிபிசிஐடி போலீஸார், பலத்த போலீஸார் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

அத்துடன், தோட்டக்குறிச்சியில் உள்ள செல்வராஜ், கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ரகு மற்றும் பத்திரப்பதிவின் போது சாட்சிக் கையெழுத்திட்ட முனியநாதனூரில் உள்ள ஈஸ்வரமூர்த்தி ஆகியோரது வீடுகளிலும் சிபிசிஐடி போலீஸார் இன்று காலை 8 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி, நாமக்கல், சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட போலீஸார் இந்தச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனு 2-வது முறையாக நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வரும் நிலையில், அந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தி வருவது கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், முன் ஜாமீன் மனு மீதான உத்தரவு மாலை 4 மணிக்கு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x