Published : 05 Jul 2024 06:46 AM
Last Updated : 05 Jul 2024 06:46 AM

மக்களுடன் முதல்வர், காலை உணவு திட்டம் விரிவாக்க நிகழ்ச்சிகளில் எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழக அரசின் மக்களுடன் முதல்வர் மற்றும் காலை உணவுத் திட்டங்களின் விரிவாக்க நிகழ்ச்சிகள் ஜூலை 11 மற்றும் 15-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளன. இதையடுத்து, அந்தந்த தொகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர்ஸ்டாலின், அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பொதுமக்கள் தினமும் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்று சேருவதற்காக கடந்த டிசம்பர் 18-ம் தேதி ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் முதல்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அமலுக்கு வந்தது. அதன்மூலம் மொத்தம் 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

தொடர்ந்து அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தருமபுரி மாவட்டத்தில் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் விழாவில் இந்த திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கவுள்ளேன். அதேபோல், அன்றைய தினம் விழுப்புரம் மாவட்டம் நீங்கலாக மற்ற மாவட்டங்களிலும் சார்ந்த அமைச்சர்கள் இந்நிகழ்வை தொடங்கி வைக்கவுள்ளனர். மக்களின் தேவைகளை உணர்ந்து அவற்றை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் நடைபெற உள்ள ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம்களில் கலந்துகொள்ள வேண்டும்.

இதுதவிர, 2022-ம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கி வைக்கப்பட்ட ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ பொதுமக்களிடம் நல்வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும்தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர் வருகை அதிகரிப்பு: இதன்மூலம் 14 லட்சத்து 40,351 மாணவர்கள் பயன் அடைகின்றனர். இதற்கிடையே சத்தான உணவினை வழங்குவதன் காரணமாக பள்ளிகளில் மாணவர் வருகையும் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும்,வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், காலை உணவு தயாரிக்கும் நேரம் மற்றும் பொருட்செலவு மிச்சமாவதாகவும், தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம், படிப்புத் திறன் உயர்ந்துள்ளதை கண்டு பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்து வருவதாக திட்டக்குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதையடுத்து, ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பள்ளிகளிலும் 1 முதல் 5-ம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. காமராஜர் பிறந்த தினமான கல்வி வளர்ச்சி நாளில் ஜூலை 15-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் அந்த திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளேன்.

அன்றைய தினம் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட ஊரக அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும். இவ்விரு திட்டங்களின் விரிவாக்க நிகழ்ச்சிகள் தொடர்பாக உரிய அறிவுரைகள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நிகழ்வுகளில் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆதரவை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x