Last Updated : 04 Jul, 2024 06:46 PM

 

Published : 04 Jul 2024 06:46 PM
Last Updated : 04 Jul 2024 06:46 PM

புதுச்சேரி பிஆர்டிசி ஒப்பந்த ஓட்டுநர், நடத்துநர்களுக்கு ஊதிய உயர்வு

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்

புதுச்சேரி: புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஓட்டுநர், நடத்துநர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி அதற்கான ஆணையை முதல்வர் ரங்கசாமி, போக்குவரத்து துறை ஆணையரும், பிஆர்டிசி மேலாண் இயக்குநருமான சிவக்குமாரிடம் இன்று (ஜூலை 4) வழங்கினார்.

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் (பிஆர்டிசி) மொத்தமாக 617 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 354 பேர் நிரந்த ஊழியர்களாகவும், 263 (ஓட்டுநர்-118, நடத்துநர்-145 ) பேர் ஒப்பந்த அடிப்படையிலும் பணிபுரிகின்றனர்.இதனிடையே ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டுமென நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று ஒப்பந்த ஓட்டுநர்களின் மாத ஊதியத்தை ரூ.10,804-ல் இருந்து ரூ.16,796 ஆகவும், ஒப்பந்த நடத்துநர்களின் மாத ஊதியத்தை ரூ.10,656-ல் இருந்து ரூ.16,585 ஆகவும் உயர்த்தி முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இந்நிலையில், ஊதிய உயர்வுக்கான ஆணையை வழங்கும் நிகழ்ச்சி சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

முதல்வர் ரங்கசாமி பிஆர்டிசி ஒப்பந்த ஓட்டுநர், நடத்துநர்களுக்கான ஊதிய உயர்வு ஆணையை போக்குவரத்து துறை ஆணையரும், புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநருமான சிவக்குமாரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழக பொது மேலாளர் (நிர்வாகம்) கலியபெருமாள் ஆகியோர் உடனிருந்தனர். இந்த ஊதிய உயர்வு ஜூன் 1-ல் இருந்து அமலாகிறது என்றும், இதன் மூலம் பிஆர்டிசிக்கு மாதம் தோறும் ரூ.14 லட்சம் வரை கூடுதல் செலவாகும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x