Published : 04 Jul 2024 12:29 PM
Last Updated : 04 Jul 2024 12:29 PM

சேலம் அதிமுக நிர்வாகி கொலையில் உடனடி நடவடிக்கை: அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை

எடப்பாடி பழனிசாமி

சென்னை: சேலத்தில் அதிமுக பகுதிச் செயலாளரும், மாநகராட்சியின் முன்னாள் மண்டலக் குழு தலைவருமான சண்முகம் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை சாடியுள்ளார். அதோடு சண்முகத்துக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சேலம் மாநகர் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதிக் கழகச் செயலாளர் ஆ. சண்முகம் நேற்று இரவு (புதன்கிழமை) அவரது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது அங்கே மறைந்திருந்த கொலையாளிகள் அவரை வழிமறித்து கொடூரமாகப் படுகொலை செய்துள்ளனர். இவருக்கு மனைவி, திருமணமான மகள் மற்றும் மகன் ஆகியோர் உள்ளனர்.

சண்முகம் தனது சிறு வயதிலேயே கழகத்தில் இணைந்து, சேலம் மாநகர் மாவட்டம், 55-ஆவது வட்டக் கழகச் செயலாளராகவும், தொடர்ந்து 22 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டலாம்பட்டி பகுதிக் கழகச் செயலாளராகவும் திறம்பட பணியாற்றியவர். மேலும், 2001-2006 மற்றும் 2011-2016 என்று இருமுறை சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலக் குழுத் தலைவராக திறம்பட பணியாற்றி உள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்துத் தேர்தல்களிலும் முழு ஈடுபாட்டுடன் கழகப் பணியாற்றி மக்களிடத்திலும், கட்சித் தொண்டர்களிடத்திலும் அன்பாகப் பழகி நன்மதிப்பைப் பெற்றவர். அப்படிப்பட்ட ஒரு சிறந்த தொண்டரை இன்று நாம் இழந்துள்ளது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. தினசரி கொலை, கொள்ளை நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது என்று பலமுறை நான் கூறியபோதும், இந்த திமுக அரசு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

நேற்று (புதன்கிழமை) இரவு சுமார் 10 மணி அளவில், சண்முகம் தனது வீட்டிற்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது, கொலையாளிகள் அந்தப் பகுதியில் உள்ள தெரு விளக்குகளை துண்டித்தும், அங்குள்ள கேமராக்களை உடைத்தும், திட்டமிட்டு கொடூரமான முறையில் அவரை படுகொலை செய்துள்ளனர். சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவத்திற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இக்கொலைக் குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் உடனடியாகக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகத்தின் தீவிர விசுவாசி அன்புச் சகோதரர் சண்முகத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x