Published : 03 Jul 2024 03:59 PM
Last Updated : 03 Jul 2024 03:59 PM

“நாய்கூட பி.ஏ பட்டம் வாங்கும் நிலை...” - நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி சர்ச்சைப் பேச்சு

நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: ம.பிரபு

சென்னை: “நான் பட்டம் பெறும் காலத்தில், ஒருவர் பி.ஏ. பட்டம் பெற்றால், உடனடியாக ஒரு பெயின்ட்ரை அழைத்து பி.ஏ. என்று போர்டு எழுதி மாட்டுவார்கள். காரணம் என்னவென்றால், அந்த ஊரிலேயே ஒரே ஒரு பி.ஏ.தான் இருக்கும். ஆனால், இப்போது நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது நம்ம ஊரில்,” என்று நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு அவர் விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணி சார்பில் நீட் எதிர்ப்பு போராட்டம் இன்று (ஜூலை 3) நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நீட் தேர்வை நடத்துவதில் தீவிரம் காட்டும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “நீட் எனும் சமூக அநீதிக்கு எதிரான திராவிட முன்னேற்றக் கழகத்தின் போரில் இன்று ஒலிக்கும் முழக்கங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு சர்ச்சைக்குள்ளானது. “நான் ஒரு வக்கீல். எழிலரசன் பி.இ., பி.எல்., இவையெல்லாம் எங்களுக்கு குலப் பெருமையால், கோத்திரப் பெருமையால் வந்தததா? இந்த இயக்கம் போட்ட பிச்சை என்பதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். திராவிட இயக்கம் இல்லையென்றால், கம்யூனல் அரசாணை இல்லை என்று சொன்னால், இத்தனை பேர் டாக்டர் பட்டம் பெற்றிருக்க முடியாது.

நான் பட்டம் பெறும் காலத்தில் ஒருவர் பி.ஏ. பட்டம் பெற்றால், உடனடியாக ஒரு பெயின்ட்ரை அழைத்து பி.ஏ. என்று போர்டு எழுதி மாட்டுவார்கள். காரணம் என்னவென்றால், அந்த ஊரிலேயே ஒரே ஒரு பி.ஏ. தான் இருக்கும். ஆனால், இப்போது நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது நம்ம ஊரில். ஆனால், யாராவது போர்டு மாட்டுகிறார்களா? எனவே, இந்த வளர்ச்சிக்கு யார் காரணம் என்பதை மக்களை எண்ணிப் பார்க்க வேண்டும். அதை அழிப்பதற்காகத்தான் இந்த நீட் தேர்வு வந்திருககிறது” என்று பேசினார்.

இந்தப் பேச்சு சர்ச்சையான நிலையில், “ஒரு காலத்தில், ஒரு சில பிரிவினருக்கு மட்டுமே கிடைத்த கல்வி, அனைவருக்கும் கிடைக்க காரணம் திராவிட இயக்கம்தான் என்பதே தனது பேச்சின் நோக்கம். மேலும், நாய்கூட பி.ஏ. பட்டம் பெறுகிறது என்பது உள்நோக்கத்துடன் சொல்லப்பட்ட கருத்து அல்ல” என்று ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x