Published : 03 Jul 2024 12:14 PM
Last Updated : 03 Jul 2024 12:14 PM

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1998-ம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ண ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், 16 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை எம்.பி - எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இவ்வழக்கில், பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் 2019-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி தீர்ப்பளித்தது. மூன்றாண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டதால், பாலகிருஷ்ண ரெட்டி தனது அமைச்சர் பதவியை இழந்தார். சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், காவல் துறையினரின் விசாரணையில் குறைபாடுகள் உள்ளதாகவும், உண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை அரசுத்தரப்பு கண்டறியவில்லை எனவும், பலவீனமான ஆதாரங்களே உள்ளதாகவும், அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை எனவும் கூறி, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x