Published : 03 Jul 2024 05:57 AM
Last Updated : 03 Jul 2024 05:57 AM

அக்.30-ம் தேதி பயணத்துக்கான தீபாவளி டிக்கெட் முன்பதிவு 5 நிமிடத்தில் முடிந்தது: சொந்த ஊர் செல்வோர் ஏமாற்றம்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்.30-ம் தேதிக்கான ரயில் டிக்கெட்முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களில் முடிந்தது.

தீபாவளி பண்டிகை அக்.31-ம்தேதி (வியாழன்) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பண்டிகைக்கு சில நாட்கள் முன்பாகரயில்களில் சொந்த ஊர்களுக்குபுறப்படுவதற்கு வசதியாக, டிக்கெட் முன்பதிவு சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஜூன் 30, ஜூலை 1 ஆகிய தேதிகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிசில நிமிடங்களில் முடிந்தது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு ஒருநாள் முன்பாக அக்.30-ம் தேதி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு ரயில்களில் புறப்படுவதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8மணிக்கு தொடங்கியது. ஐஆர்சிடிசிஇணையதளம், ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில்டிக்கெட் முன்பதிவு நடைபெற்றது.

சென்னையில் இருந்து மதுரை,நெல்லை, தென்காசி செல்லும் ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும்வசதி பெட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு அடுத்தடுத்து 5 நிமிடங்களுக்குள் முடிந்து, காத்திருப்போர் பட்டியலுக்கு வந்தது.இந்த ரயில்களில் காலை 11 மணிக்கு காத்திருப்போர் பட்டியலும் முடிந்து ‘ரெக்ரெட்’ என்று காட்டியது.

சென்னையில் இருந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்கு புறப்படும் முத்துநகர், கன்னியாகுமரி, அனந்தபுரி விரைவு ரயில்களில் முறையே 313, 266, 296 என காத்திருப்போர் பட்டியல் இருந்தது. இதுபோல, சென்னையில் இருந்து கோவை செல்லும் சேரன், நீலகிரி ஆகிய விரைவு ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு விரைவாக முடிந்து காத்திருப்போர் பட்டியல் வந்தது.

இதுதவிர, சென்னையில் இருந்து புறப்படும் பகல் நேர ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியலுக்கு வந்தது. பொதுவாக, 2-ம் வகுப்பு தூங்கும் வசதிக்கான பெட்டிகள், 3 அடுக்கு ஏசி பெட்டிகளுக்கான டிக்கெட் விரைவாக முடிந்தாலும், இரண்டு அடுக்கு ஏசி, முதல்வகுப்பு ஏசி பெட்டிக்கான டிக்கெட் முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

டிக்கெட் முன்பதிவு செய்ய சென்னை சென்ட்ரல், எழும்பூரில் நேற்று காலை 6 மணிக்கே பயணிகள் காத்திருந்தனர். ஒவ்வொரு கவுன்ட்டரில் முதலில் வந்த 3 பேருக்கு மட்டுமே டிக்கெட் கிடைத்தது. மீதமுள்ளவர்களுக்கு காத்திருப்போர் பட்டியல் வந்தது. இதனால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை போன்ற முக்கிய நாட்களில் வழக்கமான விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டதால், பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களை முன்னதாகவே அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x