Published : 02 Aug 2014 10:00 AM
Last Updated : 02 Aug 2014 10:00 AM
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள சடையன் கிராமத்தைச் சேர்ந்தவர் அல்லிராஜன். இவரது மகள் திவ்யா(16), பத்தாம் வகுப்பு முடித்தவர்.
அதே கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்ராஜ்(24). சென்னையில் ஹோட்டலில் வேலை செய்து வந்தார். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த சரண்ராஜும், திவ்யாவும் காதலித்து வந்தனராம். திடீரென இருவரும் கடந்த மே 16-ம் தேதி தலைமறைவாயினர். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அல்லிராஜன் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்ததை அடுத்து, திவ்யாவை நீதிமன்றத்தில் சரண்ராஜ் ஒப்படைத்தார்.
பின்னர், கடந்த மாதம் 6-ம் தேதி பூச்சி மருந்து சாப்பிட்டு திவ்யா வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக அல்லிராஜன் முதுகுளத்தூர் போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால், மதுரை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில், திவ்யா மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாகவும், பூச்சி மருந்து சாப்பிட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, போலீஸார் நடத்திய விசாரணையில், அல்லிராஜன் தலையணையால் திவ்யாவின் முகத்தை அமுக்கி கவுரவக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் சதீஷ்குமார் வியாழக்கிழமை மாலை அல்லிராஜனைக் கைது செய்தார்.
தொடரும் கவுரவக் கொலைகள்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் வெளியுலகுக்குத் தெரிந்த வகையில், குயன்வன்குடியைச் சேர்ந்த பவானி, உச்சிப்புளியைச் சேர்ந்த வைதேகி ஆகியோரைத் தொடர்ந்து தற்போது 3-வதாக திவ்யா கவுரவக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT