Published : 02 Jul 2024 03:01 PM
Last Updated : 02 Jul 2024 03:01 PM

வேலூர் இளைஞர் பெயரில் கோவையில் போலி நிறுவனம் - ‘ரூ.3.50 கோடி ஜிஎஸ்டி வரி நிலுவை’

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் ஜி.எஸ்.டி வரி நிலுவை வைத்துள்ள புகார் தொடர்பாக மனு அளிக்க வந்த முகமது நயிமுதீன்.

வேலூர்: வேலூரைச் சேர்ந்த இளைஞர் பெயரில் கோவையில் போலி நிறுவனம் நடத்திய ரூ.24 கோடி வர்த்தகம் செய்யப்பட்டு ரூ.3.50 கோடி ஜி.எஸ்.டி நிலுவை இருப்பதாக கூறி வந்துள்ள கடிதம் தொடர்பாக மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் இளைஞர் புகார் மனு அளித்துள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், தனித் துணை ஆட்சியர் (சமூக பாது காப்பு திட்டம்) கலியமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமச்சந்திரன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலு வலர் சரவணன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை ரீதியான விசாரணைக்கு அனுப்பினர்.

இந்த கூட்டத்தில், வேலூர் ஆர்.என்.பாளையம் கே.கே.நகரைச் சேர்ந்தவர் முகமது நயிமுதீன் (29) என்பவர் அளித்துள்ள மனுவில், ‘‘எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலை தேடி வருகிறேன். கடந்த மார்ச் மாதம் எனது கைபேசி எண்ணுக்கு வந்த குறுந்தகவலில் 2023-24 -ம்ஆண்டுக்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்திட அறிவுறுத்தப்பட்டிருந்தது.

நண்பர் உதவியுடன் எனது பான் கணக்கை லாக்-இன் செய்து பார்த்தபோது, எனது பான் கார்டு எண்ணை கொண்டு என்.எம்.என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம், 5/135 சேரன் காலனி ரோடு, துடியலூர், கோவை - 641034 எனும் முகவரியில் இயங்கிவருவது தெரியவந்தது.

அதற்கான ஜி.எஸ்.டி எண் எனது பெயரில் கோவை மாநகராட்சி 2-வது மண்டலத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது. இதன்மூலம், எனது பெயரில் போலியாக நிறுவனம் நடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து, கோவையில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்கு சென்று பார்த்தபோது அங்கு அதுபோன்ற நிறுவனமே செயல்படவில்லை. பிறகு, வேலூரில் உள்ள ஜி.எஸ்.டி அதிகாரிகளை தொடர்புகொண்டு எனது பெயரிலான போலி ஜி.எஸ்.டிஎண்ணை ரத்து செய்ய கோரிக்கை வைத்தேன்.

அவர்கள் முறையாக புகார் கொடுத்து, காவல் துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க கூறினார்கள். எனவே, எனது பெயரில் போலி ஜி.எஸ்.டி பணபரிவர்த்தனை மேற்கொள்ளும் மோசடி நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து முகமது நயிமுதீன் கூறும்போது, ‘‘எனது பெயரில் கடந்த 2 ஆண்டுகளாக போலியாக நிறுவனம் நடத்தி ரூ.24 கோடி வரை வர்த்தகம் செய்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் மட்டும் ரூ.7 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. ஸ்கிராப், ஆடை வியாபாரம் செய்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. ஆடிட்டிங் செய்து பார்த்தபோது, ரூ.3.50 கோடி ஜி.எஸ்.டி மட்டுமே கட்ட வேண்டிய நிலுவைத் தொகையாக காட்டுகிறது.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தபோது குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில் இருந்து மட்டும் 60-க்கும் மேற்பட்ட ஜி.எஸ்.டிமோசடி புகார்கள் வந்துள்ளதாக காவல் துறை அதிகாரிகளே தெரிவித்துள்ளனர். அந்தளவுக்கு ஜி.எஸ்.டி மோசடிகள் நடைபெற்று வருகிறது’’ என்றார்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் ராஜா பெருமாள் அளித்த மனுவில், ‘‘பாலாற்றில் வரும் தண்ணீரானது எந்தவித பயனும் இல்லாமல் கடலில் கலக்கிறது. இதனை தடுத்து வழிநெடுகிலும் உள்ள ஏரி, குளங்களுக்கு கால்வாய்கள் அமைத்து நீரை சேமித்தால் நீர்வளம் மேம் படும். இதன்மூலம் விவசாயமும் செழிப்படையும். எனவே, விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாலாற்றில் தடுப்பணைகள், கால்வாய்கள் அமைத்து ஏரி, குளங்களில் நீரை சேமித்திட வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில், பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி 587 மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் சார்பில் 21 பேருக்கு ரூ.5.40 லட்சத் துக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x