Published : 02 Jul 2024 02:50 PM
Last Updated : 02 Jul 2024 02:50 PM

முன்ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு: விசாரணை ஒத்திவைப்பு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் | கோப்புப்படம்

கரூர்: கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த இடைக்கால முன் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு (ஜூலை 3) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கரூர் நகர காவல் நிலையத்தில் மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் அளித்த புகாரில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜ், பிரவீன் ஆகியோர் போலியான சான்றிதழ் கொடுத்து பத்திரப்பதிவு செய்ததுடன் அதுதொடர்பான தொடர்பான ஆவணங்களை வழங்கவேண்டும் என்றும் சொத்து அரசியல், அதிகாரம் மிக்க நபருக்காக பதிவு செய்யப்பட்டது எனவும், அசல் பத்திரத்தை ஒப்படைக்கக் கோரி தன்னை மிரட்டியதாகவும் அதனால் தனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

புகாரின்பேரில் கரூர் நகர போலீஸார் யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 9-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இவ்வழக்கில் தானும் சேர்க்கப்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் 12-ம் தேதி மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்பதால் கடந்த 3 வாரங்களாக விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வருகிறார்.

இதற்கிடையில், சார்பதிவாளர் அளித்த நில மோசடி புகார் வழக்கு கடந்த மாதம் 14-ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நில உரிமையாளர் ஷோபனாவின் தந்தை பிரகாஷ் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் கடந்த 14-ம் தேதி புகார் அளித்தார். இந்த புகார் வாங்கல் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு கடந்த 22-ம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீன் உள்ளிட்ட 13 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் சிகிச்சையின்போது உடனிருக்க வேண்டும் எனக்கூறி கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமீன் கேட்டு திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கு முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 2) விசாரணைக்கு வந்த நிலையில், விசாரணையை புதன்கிழமைக்கு தள்ளிவைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x