Published : 02 Jul 2024 05:04 AM
Last Updated : 02 Jul 2024 05:04 AM

மத்திய அரசின் 3 சட்டங்களை எதிர்த்து திமுக சார்பில் ஜூலை 6-ல் உண்ணாவிரத போராட்டம்

சென்னை: மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் திமுக சட்டத் துறை சார்பில் ஜூலை 6-ம்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சட்டத் துறை ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 29-ம் தேதி காணொலி வாயிலாக நடந்தது. திமுக சட்டத் துறை தலைவர் ஆர்.விடுதலை முன்னிலையில், செயலாளர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.

மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. இவை நீதி பரிபாலனம், மாநில சுயாட்சி, மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இந்தியாவை காவல்துறை ஆதிக்க ஆட்சி நாடாக மாற்றிவிடும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.

திமுக சட்டத் துறை சார்பில் ஜூலை 5-ம் தேதி காலை 10 மணி அளவில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஜூலை 6-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களின் பாதகங்களையும் வழக்கறிஞர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் கண்டன கருத்தரங்கம், அரங்க கூட்டங்கள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x