Published : 01 Jul 2024 12:59 PM
Last Updated : 01 Jul 2024 12:59 PM

சில நிமிடங்களில் முடிந்தது தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு  @ சென்னை

சென்னை: சென்னையில் இருந்து புறப்படும் விரைவு ரயில்களுக்கான தீபாவளி பண்டிக்கை டிக்கெட் முன்பதிவு இன்று (ஜூலை 1) காலை தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (ஜூலை 1) காலை தொடங்கியது. தென் மாவட்டங்ளுக்கு புறப்படும் ரயில்களில் சில நிமிடங்களிலேயே டிக்கெட் முன்பதிவு முடித்து காத்திருப்போர் பட்டியல் வந்தது.

நிகழாண்டில் தீபாவளி பண்டிகை வரும் அக்.31-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ரயில் டிக்கெட் முன்பதிவை பொருத்தவரை 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அந்தவகையில், பண்டிகைக்கு இரண்டு நாள் முன்பாக, அக்.29-ம் தேதி அன்று சென்னையில் இருந்து விரைவு ரயில்களில் புறப்படுவதற்கு வசதியாக, டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வழியாகவும், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு நடைபெற்றது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் முக்கிய விரைவு ரயில்களில் சில நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியல் காட்டியது. சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஊர்களுக்கு புறப்படும் பாண்டியன், நெல்லை, பொதிகை விரைவு ரயில்களின் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் 2 நிமிடங்களிலேயே டிக்கெட் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியல் காட்டியது. இந்த மூன்று ரயில்களில் திங்கள்கிழமை காலை 11 மணி நிலவரப்படி, காத்திருப்போர் பட்டியல் பதிவும் முடிந்து, 'ரெக்ரெட்' (regret) என்று வந்தது.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்படும் முத்துநகர், நாகர்கோவிலுக்கு புறப்படும் கன்னியாகுமரி விரைவுரயில், நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரிவிரைவு ரயில் ஆகியவற்றில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, முறையே 283, 200, 352 என காத்திருப்போர் பட்டியல் காட்டியது. இதுபோல, சென்னையில் இருந்து தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு புறப்படும் சேரன், நீலகிரி ஆகிய விரைவு ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் வந்தது.

இதுதவிர, பகல் நேரத்தில் சென்னையில் இருந்து புறப்படும் வைகை, பல்லவன், குருவாயூர் ஆகிய விரைவு ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியலை நெருங்கியது. முக்கிய ரயில்களில் அனைத்திலும் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 அடுக்கு ஏசி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு அடுத்தடுத்து முடிந்து காத்திருப்போர் பட்டியலுக்கு வந்தது. மற்ற வகுப்புகளில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x