Last Updated : 30 Jun, 2024 03:16 PM

 

Published : 30 Jun 2024 03:16 PM
Last Updated : 30 Jun 2024 03:16 PM

மக்கள்தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பு - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வலியுறுத்தல்

விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத்தலைவர் காதர் மொய்தீன் பேசுகிறார்.

விழுப்புரம்: மக்கள்தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படவேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் இண்டியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக விழுப்புரம் வந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன், அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ''ஆட்சியில் உள்ளவர்களை ஆட்டுவிக்கும் சக்தியை இண்டியா கூட்டணி பெற்றுள்ளது. பிரதமரின் மறைமுக வேட்பாளராக ஓ.பன்னீர் செல்வம் ராமநாதபுரத்தில் நிறுத்தப்பட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வெற்றிபெற்றது.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போல ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்தால் இண்டியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்றிருக்கும். தமிழ்நாடு போல மற்ற மாநிலங்களில் கூட்டணி கட்சிகள் ஒருங்கிணையாததால்தான் பாஜக ஆட்சிக்கு வந்தது. வருங்காலங்களில் இதை உணர்ந்து இண்டியா கூட்டணி செயல்பட வேண்டும்.

கேரளாவில் மக்களைவை மற்றும் மாநிலங்களையில் தலா 2 எம்பி-கள், தமிழகத்தில் ஒரு எம்பி என நாடாளுமன்றத்தில் எங்கள் கட்சிக்கு 5 எம்பி-கள் உள்ளனர். முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேவையில்லை என்று காயதே மில்லத் சொன்னதை இன்னமும் கடைபிடித்து வருகிறோம்.

இந்தியாவில் 4,698 சாதிகள் உள்ளதாக கணக்கெடுப்பு சொல்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பும் மத்திய அரசு நடத்தும் என நம்புகிறோம். டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலக திறப்புவிழா அடுத்தமாதம் நடைபெறுகிறது'' என்றார். அப்போது மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் ரப்பானி, மாநில நிர்வாகி முகமது ரஃபி, மாவட்ட செயலாளர் அமீர் அப்பாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x