Published : 28 Jun 2024 04:09 PM
Last Updated : 28 Jun 2024 04:09 PM

கொலை வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ, 11 பேர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு: சிபிஐ பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொலை வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏவான புரசைவாக்கம் ரெங்கநாதன் உள்ளிட்ட 12 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கொளத்துாரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான புவனேஸ்வரன் என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 2012 ஜனவரி 10-ம் தேதி மர்ம நபர்களால் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய, சிபிஐ அதிகாரிகள் திமுக முன்னாள் எம்எல்ஏ-வான புரசைவாக்கம் ரெங்கநாதன், சையது இப்ராகிம், செல்வம், சதீஷ், முரளி, குமார், தணிகாசலம், பாலசந்திரன் உள்பட 12 பேருக்கு எதிராக, சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ரெங்கநாதன் உள்ளிட்ட 12 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிருப்பிக்கப்படவில்லை எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, கொலை செய்யப்பட்ட புவனேஸ்வரனின் சகோதரர் மகேஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு, சிபிஐ மற்றும் ரெங்கநாதன் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x