Published : 28 Jun 2024 05:20 AM
Last Updated : 28 Jun 2024 05:20 AM

தமிழகத்தில் சட்டவிரோத மணல் விற்பனையால் அரசுக்கு ரூ.4,730 கோடி இழப்பு: டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம்

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக 23.64 லட்சம் யூனிட் அளவுக்கு மணல் அள்ளப்பட்டதால் அரசுக்கு ரூ.4,730 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என, தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘தமிழக மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்ததைவிட கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுகிறது. அதன்மூலம் கிடைத்த பல கோடி ரூபாய் வருமானத்தை கொண்டு சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெறுகிறது’ என அமலாக்கத் துறைக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குவாரிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள், ஆவணங்களை கைப்பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள், அதிகாரிகள், திருச்சி, கரூர், தஞ்சாவூர், வேலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இதன் அடிப்படையில், மணல் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதும், பினாமி பெயர்களில் ஆவணங்கள் இருந்ததும், போலி பில் மூலம் மணல் விற்பனை செய்து அரசுக்கு ஜிஎஸ்டி வரி இழப்பை ஏற்படுத்தியதும் கண்டறியப்பட்டது. மொத்தம் ரூ.4,730 கோடிக்கு மணல் விற்பனை நடந்த நிலையில், கணக்கு புத்தகத்தில் வருவாய் ரூ.36.45 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதுபற்றி முழுமையாக விசாரிக்குமாறு வருமான வரித் துறை மற்றும் ஜிஎஸ்டி விசாரணை குழுவுக்கு அமலாக்கத் துறை சமீபத்தில் கடிதம் எழுதியது.

இந்நிலையில், இதுகுறித்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கும் அமலாக்கத் துறை தற்போது கடிதம் எழுதியுள்ளது. கடந்த 9 மாதங்களாக நடத்தப்பட்ட விரிவான விசாரணையில், தமிழகத்தில் 2023-24 காலகட்டத்தில் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக 23.64 லட்சம் யூனிட் அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது. குத்தகைக்கு விடப்பட்ட மணல் படுகைகளில் மணல் அள்ளும் இயந்திரங்கள் மூலம் தனியார் ஒப்பந்ததாரர்கள் சட்ட விரோதமாக அளவுக்கு அதிகமாக மணல் அள்ளி உள்ளனர். இதனால் அரசுக்கு ரூ.4,730 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மாநில அரசு இதில் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x