Last Updated : 26 Jun, 2024 10:11 PM

 

Published : 26 Jun 2024 10:11 PM
Last Updated : 26 Jun 2024 10:11 PM

கள்ளக்குறிச்சி சம்பவம்: குணமடைந்த 60 பேர் ஒரேநாளில் டிஸ்சார்ஜ்

புதுச்சேரி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தில் சிகிச்சையிலிருந்து குணமாகி ஒரே நாளில் இன்று 60 பேர் வீடு திரும்பினர். அதேநேரத்தில் உடல் நலம் குன்றி 4 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சிலர் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்துள்ளனர். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மொத்தம் 225 பேர் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவத்தில் செவ்வாய்க்கிழமை வரை 59 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 4 பேர் உயிரிழந்தனர். அதனால் இறந்தோர் எண்ணிக்கை 63 ஆனது.புதன்கிழமை மதியம் வரை அனைத்து மருத்துவமனைகளில் இருந்து 28 பேர் மட்டுமே டிஸ்சார்ஜ் ஆகியிருந்தனர்.

அதைத்தொடர்ந்து புதன்கிழமை இரவு வரை கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து அதிகளவாக 46 பேர் வீடு திரும்பினர். இதுவரை கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து 66 பேரும், புதுச்சேரி ஜிப்மரில் இருந்து 6 பேரும், விழுப்புரத்தில் இருந்து இருவரும், தனியார் மருத்துவமனையில் இருந்து இருவரும், சேலத்தில் இருந்து 12 பேரும் என மொத்தமாக இதுவரை 88 பேர் வீடு திரும்பினர். இதன் மூலம் இன்று ஒரே நாளில் 60 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சியில் 48, சேலத்தில் 18, விழுப்புரத்தில் 2, புதுச்சேரி ஜிப்மரில் 9 பேர், ராயபேட்டை அரசு மருத்துவமனையில் 1 என மொத்தம் 78 பேர் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரத்தில் உடல் உபாதை அறிகுறிகளுடன் 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x