Published : 26 Jun 2024 09:38 PM
Last Updated : 26 Jun 2024 09:38 PM

அறந்தாங்கி அருகே தேர் சாய்ந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே தேர் சாய்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், ராமசாமிபுரம் கிராமத்திலுள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயிலில் கடந்த ஜூன் 24ம் தேதியன்று மாலை தேரோட்டத்துக்காகத் தேரை தயார் செய்யும் பணி நடைபெற்றபோது, தேரின் மேற்பகுதியில் கலசத்தை பொருத்துகையில், கலசம் தவறிவிழுந்து தேர் ஒருபுறமாகச் சாய்ந்ததால் எதிர்பாராதவிதமாக கீழே தவறிவிழுந்த விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், மாத்தூர், ராமசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் (70) என்பருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும், தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x