Published : 26 Jun 2024 04:29 PM
Last Updated : 26 Jun 2024 04:29 PM

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை விசாரித்து முடிக்க மேலும் 4 மாத அவகாசம் வழங்கியது ஐகோர்ட்

செந்தில் பாலாஜி | கோப்புப்படம்

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை விசாரித்து முடிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மேலும் 4 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுத்ததுடன், வழக்கை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை இன்னும் தொடங்காத நிலையில், விசாரணையை முடிக்க மேலும் 4 மாதம் அவகாசம் வழங்க உத்தரவிடக்கோரி முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் அனுப்பினார். அதன் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், “இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்துக்கு காலவரம்பு நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அடுத்த நாளில், விசாரணை நீதிமன்றங்களுக்கு அதுபோன்று எந்த காலவரம்பும் நிர்ணயிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவை தானும் மதிப்பதாக கருத்து தெரிவித்த நீதிபதி, “விசாரணையை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு முறையும் புதிது, புதிதாக மனுக்களை தாக்கல் செய்யாமல், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது” என செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், “இந்த வழக்கை விசாரித்து முடிக்க தனக்கு 4 மாதம் அவகாசம் வழங்க வேண்டுமென முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி அவகாசம் கோரியுள்ளார். அதற்குள் இந்த வழக்கை விசாரித்து முடிக்கும் திறமை அவருக்கு உள்ளது” எனக்கூறி, நான்கு மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். இந்த கால அவகாசத்துக்குள் வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x