Published : 25 Jun 2024 08:56 PM
Last Updated : 25 Jun 2024 08:56 PM

3,886 பேருந்துகளில் தானியங்கி கதவுகள் முதல் சிப்பம், சரக்கு சேவை அறிமுகம் வரை: தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள்

சென்னை: பயணிகள் படிக்கட்டிலிருந்து விழுவது மற்றும் வெளிப்புற பொருட்களால் மோதுவது போன்ற விபத்துகள் முற்றிலும் தவிர்க்க 3,886 பேருந்துகளுக்கு ரூ.15.54 கோடி செலவில் தானியங்கி கதகவுகள் பொருத்தப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை, இயக்கூர்திகள் சட்டங்கள் - நிருவாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் போக்குவரத்துத்துறை, இயக்கூர்திகள் சட்டங்கள்-நிருவாகத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்தார். அவர் வெளியிட்ட 10 முக்கிய அறிவிப்புகள்:

> அதிகப்படியான ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் மூலம் ஏற்படும் ஒலி மாசினைக் கண்டறிய அச்சுப்பொறி (Printer) வசதியுடன் கூடிய ரூ.76.50 லட்சம் மதிப்பீட்டில் ஒலி அளவிடும் கருவிகள் வழங்கப்டும்.

> சாலை விபத்துக்களில் காயம் அடைந்தவர்களுக்கும், மரணமடைபவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கும் முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியின் கீழ் நிவாரணம் வழங்குவதற்கான காலதாமதத்தைத் தவிர்க்கும் வகையில் ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் ஒரு புதிய செயலி உருவாக்கப்படும்.

> வாகனத் தொகுப்பாளர் செயலி மூலம் பயணிக்கும் பயணிகளின் நலனுக்காக, தமிழகத்தில் வாகனத் தொகுப்பாளர்களுக்கான விதிகள் பயணிகள் நலன்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி ஓட்டுநர்கள், வாகன உரிமையாளர்கள், தொகுப்பாளர்கள் ஆகியோர்களின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில், வாகனத் தொகுப்பாளர்களுக்கான (Vehicle Aggregators) விதிகள் விரைவில் வகுக்கப்படும்.

> தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மாதாந்திர விருப்பம் போல் பயணம் செய்யும் பயணச்சீட்டு (Travel As You Please Ticket) அனைத்து நகரப் பேருந்துகளிலும் விரிவாக்கம் செய்யப்படும்.

> 100 பேருந்து பணிமனைகளில் பணிபுரியும் பணியாளர்களின் ஒப்பனை அறைகள் நவீன வசதிகளுடன் ரூ. 10 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

> நாள்தோறும் பேருந்துகளை சுத்தமாக பராமரிக்க, பணிமனைகளில் தானியங்கி பேருந்து கழுவும் இயந்திரம், அடிச்சட்டத்தை சுத்தம் செய்யும் தண்ணீர் பீச்சும் இயந்திரும் (Car Wash Unit),பேருந்துகளின் உட்புறம் மற்றும் பயணிகளின் இருக்கையை சுத்தம் செய்ய தூசி உறிஞ்சும் இயந்திரம் (Vaccum Cleaner) மூலம் செயலப்படுத்தும் வகையில், ரூ.10 கோடி செலவில் பணிமனைகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.

> தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், பயணக் கட்டணம் இல்லாத இதர வருவாயை அதிகரிப்பதன் நோக்கமாக கணினி மயமாக்கப்பட்ட சிப்பம் மற்றும் சரக்கு (Logistics) அனுப்புதல் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

> சென்னை பெருநகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ், இரண்டாம் கட்டமாக சுற்றுச்சூழலுக்கு உகந்த 500 மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும்.

> பயணிகள், பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் பேருந்தின் பின்புற சக்கரங்களில் விழாமல் தடுத்து, உயிரிழப்பு மற்றும் பெரிய காயங்கள் ஏற்படுவதை பெருமளவில் குறைக்க 8,771 பேருந்துகளுக்கு, ரூ. 8.77 கோடி செலவில் பாதுகாப்பு அரண்கள் பொருத்தப்படும்.

> பயணிகள் படிக்கட்டிலிருந்து விழுவது மற்றும் வெளிப்புற பொருட்களால் மோதுவது போன்ற விபத்துகள் முற்றிலும் தவிர்க்க 3,886 பேருந்துகளுக்கு ரூ.15.54 கோடி செலவில் தானியங்கி கதகவுகள் பொருத்தப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x