Published : 25 Jun 2024 09:59 AM
Last Updated : 25 Jun 2024 09:59 AM

ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்: 700-க்கும் அதிகமான படகுகள் கரையில் நிறுத்தப்பட்டன

வேலை நிறுத்தம் காரணமாக ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள படகுகள்.

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை கடலுக்குச் சென்ற ஜஸ்டின், ரெய்மெண்ட், ஹெரின் ஆகியோருக்கு சொந்தமான மூன்று விசைப்படகுகளை, நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், படகுகளிலிருந்த 22 மீனவர்களையும் கைது செய்தனர்.

இந்த மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, ஜூலை 5-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரை கண்டித்தும், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், நேற்று ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால், ராமேசுவரத்தில் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடி இறங்குதளத்தில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிடப்பட்டிருந்தன. இதனால் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x