Published : 25 Jun 2024 09:27 AM
Last Updated : 25 Jun 2024 09:27 AM

கள்ளச் சாராயத்தால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்குவது தவறான முன்னுதாரணம்: உயர் நீதிமன்ற நீதிபதி விமர்சனம்

மதுரை: கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவது தவறான முன்னுதாரணம். 100 நாள் வேலை உறுதித் திட்டம் இளைஞர்களை சோம்பேறிகளாக ஆக்குகிறது என உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் மேலூரில் ‘கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் முல்லை பெரியாறு அணையின் வரலாற்று நிகழ்வுகள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் அ.வெண்ணிலாவின், ‘நீரதிகாரம்- சில பார்வைகள்,சில பகிர்வுகள்’ நிகழ்வு நடைபெற் றது. இதில் உயர் நீதிமன்ற நிர்வாகநீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசிய தாவது: 100 நாள் வேலை உறுதித் திட்டம் என்ற பெயரில் ‘பாதி சம்பளம் எனக்கு கொடுத்துவிடு, மீதி சம்பளம் நீ எடுத்துக்கொள்’ என்று சொல்லி கிராம இளைஞர்கள் சோம்பேறிகளாக ஆக்கப்படுகின்றனர். பாதி சம்பளம் வாங்கும் இளைஞர்கள் மதுபானக் கடைக்குச் செல்கின்றனர். ரூ.200 சம்பளம் கிடைத்தால் மதுவுக்கு ரூ.150 செலவு செய்ய முடியாது, இதனால் மலிவு விலைக்கு ஏதாவது கிடைக்குமா என தேடுகின்றனர். அப்படி மலிவு விலையை தேடிப்போன ஒரு கூட்டம்தான் கள்ளக்குறிச்சியில் மாண்டுபோய் இருக்கிறது.

ஆர்.சுரேஷ்குமார்

கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவது எவ்வளவு பெரிய தீய முன்னுதாரணம் என்பதை உணர வேண்டும். ந்த நிலை மாற வேண்டும். பள்ளியில், கல்லூரியில் சேரும் காலத்தில், படிக்கும் காலத்தில் இளைஞர்கள் தொடர்ந்து நல்வழிப்படுத்தப்பட வேண்டும்.

இன்றைக்கு இருக்கும் வசதி, வாய்ப்புகளை நம் முன்னோர்கள் எப்படி பெற்று தந்தனர் என்ற வரலாற்றை இளைஞர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த வரலாற்றை சொல்லும் தார்மீக கடமை எழுத்தாளர்களுக்கும் உண்டு.

சமூகத்தை நல்வழிப்படுத்தும், ஒழுங்குபடுத்தும் பணியை இலக்கியப் படைப்புகள் செய்கின்றன. பாரம்பரியம், வரலாற்றை மறக்காமல் இளைஞர்களை ஒருமுகப் படுத்தி அழைத்துச் சென்றால் உலகம் முழுவதும் உள்ள எல்லா சமூகங்களையும் விட தமிழ் சமூகம் முன்னேறிய நாகரிக சமூகமாக மாறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x