Last Updated : 24 Jun, 2024 09:04 PM

 

Published : 24 Jun 2024 09:04 PM
Last Updated : 24 Jun 2024 09:04 PM

“திமுகவுக்கும் சமூக நீதிக்கும் தொடர்பு இல்லை” - விக்கிரவாண்டி பிரச்சாரத்தில் அன்புமணி பேச்சு

விக்கிரவாண்டி அருகே ராதாபுரத்தில் பாமக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். 

விழுப்புரம்: “சமூக நீதிக்கும் இன்றைய திமுகவுக்கும் தொடர்பில்லை. கடந்த தேர்தலில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறிய வாக்குறுதி என்னாவாயிற்று?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் கிராமத்தில் திங்கள்கிழமை மாலை தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். இப்பிரச்சாரத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியது: “இத்தேர்தல் தமிழக மக்களுக்கு முக்கியமான தேர்தலாகும். தமிழக மக்கள் சமூக நீதி பெற பாமக வெற்றி பெற வேண்டும்.

திமுக வேட்பாளர் வென்றால் அவர் குடும்பம் முன்னேறும். பாமக வேட்பாளர் வெற்றி பெற்றால் சாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும். அடுத்த மாதமே 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு கொடுக்கப்படும். திமுக அமைச்சர்கள் கொண்டு வந்த மூட்டையில் உள்ளதை கொடுக்கும்போது, வாங்குவதும் வாங்காததும் உங்கள் விருப்பம். தமிழகத்தின் வாழ்க்கை பிரச்சினை உங்கள் கையில் உள்ளது.

இந்த மண் செய்த தியாகத்துக்கு, இத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும். இன்று நடைபெற்ற சட்டமன்றத்தில் ஜி.கே. மணி எப்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு கொடுப்பீர்கள் என்று கேட்டபோது, முதல்வர் ஸ்டாலின் கூறியது என்னவெனில், நீங்கள் உங்கள் கூட்டணி கட்சியோடு பேசி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஏற்கெனவே பிஹார் மாநிலத்தில் இதுபோன்ற கணக்கெடுப்பு நடத்தியதை நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக முதல்வர் தவறாக கூறியுள்ளார்.

கொடுக்கப்பட்ட இடஒதுக்கீடு சதவீதத்தைத்தான் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. சமூக நீதிக்கும் இன்றைய திமுகவுக்கும் தொடர்பில்லை. கடந்த வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறிய வாக்குறுதி என்னாயிற்று? 10.5 சதவீதம் கொடுக்க முடியாது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகுதான் இட ஒதுக்கீடு கொடுக்க முடியும் என்று கூறுகிறார்.

தருமபுரியில் உதயநிதி பேசும்போது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்படும் என்று கூறி வாக்குகள் பெற்ற பின் ஏமாற்றியுள்ளார். இதுதான் சமூக நீதியா? வெட்கக்கேடு. முதல்வர் தரவுகள் இல்லை என்கிறார். அமைச்சர் சிவசங்கர் தரவுகள் உள்ளது என்கிறார். இவர்களில் யார் பொய் சொல்கிறார்கள்? இது என்ன மோசடி? இந்தியாவில் 69 சதவீதம் இடஒதுக்கீடு வாங்கி கொடுத்தது பாமக. கருணாநிதி இருந்திருந்தால் இந்நேரம் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். கருணாநிதியை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய காரணம் பாமகதான்.

இதுகுறித்த வழக்கை கருணாநிதிக்காக பாமக திரும்பப்பெற்றது. கள்ளச் சாராயத்தால் இறந்தவர்களில் 90 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்கள். இச்சாவுகளுக்கு இரண்டு எம்எல்ஏ-க்கள் தான் காரணம் என்று பள்ளி செல்லும் சிறுவர்கள்கூட கூறுகின்றனர். இந்த சாவு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும். சிபிசிஐடி போலீஸார் மீது மரியாதை உள்ளது. நம்பிக்கை இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஊராட்சிமன்ற தலைவருக்கு உரிமை உள்ளது. ஆனால் முதல்வர் உரிமை இல்லை என்கிறார். அதிமுகவினருக்கு ஒரு வேண்டுகோள். திமுகவை ஒழிக்க எம்ஜிஆர் விரும்பினார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாமகவுக்கு வாக்களியுங்கள்,” என்று அவர் பேசினார்.

பிரச்சாரத்தின்போது, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு, சிவகுமார் எம் எல் ஏ, பாஜக தலைவர் கலிவரதன், தமாகா தலைவர் தசரதன், பாமக தலைவர் தங்கஜோதி, அமைப்பு செயலாளர் பழனிவேலு, ஐ ஜே கே மாநில இளைஞர் சங்க செயலாளர் அறிவழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x