Last Updated : 23 Jun, 2024 07:07 PM

 

Published : 23 Jun 2024 07:07 PM
Last Updated : 23 Jun 2024 07:07 PM

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் இதுவரை 14 பேர் கைது

கள்ளக்குறிச்சி: தமிழகத்தையே உலுக்கிவரும் கள்ளக்குறிச்சி கள்ளச் சாரய சம்பவத்தில் தொடர்புடைய 14 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி ஆகிய பகுதிகளில் கள்ளச் சாராயம் என்ற பெயரில் மெத்தனால் கலந்த விஷச் சாராயத்தை விற்பனை செய்ததை வாங்கி அருந்தியவர்களில் இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான தனிக்குழுவினர் கடந்த 5 தினங்களாக விசாரணை மேற்கொண்ட நிலையில், கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் விற்பனை செய்ததாக கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, அவரது சகோதரர் தமோதரன், இவரது மனைவி சந்திரா ஆகியோரை இரு தினங்களுக்கு முன் கைதுசெய்து கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து தொடர் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கில் முக்கிய குற்றச்சாட்டுக்குள்ளானவராக கருதப்படும் சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரை பண்ருட்டி அருகே கைது செய்தனர்.

தொடர்ந்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மெத்தனால் விற்பனையில் தொடர்புடைய சங்கராபுரம் அரியூரைச் சேர்ந்த ஜோசப்ராஜா, லூர்துசாமி, சூசைநாதன், மாதவச்சேரி ராமர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் மரக்காணத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவரும், கடலூர் மாவட்டம் தம்பிப்பேட்டையைச் சேர்ந்த ராஜா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைதின் தொடர்ச்சியாக மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் கைதாாகி சிறை சென்று வெளிவந்த மாதேஷூக்கு, மெத்தனால் வாங்க ஜிஎஸ்டி பில் அளித்து உதவியதாக பண்ருட்டியில் சிப்ஸ் கடை நடத்திவந்த சக்திவேல் என்பவரையும், மீன் வியபாரி கண்ணன் என்பரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இதேபோன்று சேலம் மாவட்டம் கருமந்துறை கல்லாநத்தம் சங்கர் என்பரையும் கைது செய்துள்ளனர்.

விருத்தாசலத்தில் இருவர் கைது: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் விற்பனைக்கு விருத்தாசலத்தில் இருந்து மூலப்பொருள் பெறப்பட்டதாக இரண்டு பேரை கைது செய்த போலீஸார், நீதிபதி முன் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

விருத்தாசலம் செராமிக் தொழிற்சாலை பிரிவில் அகல்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்திவரும் ஜோதிமணி மற்றும் கேசவகுமார் ஆகிய இருவரும் கள்ளச்சாராயத்தில் கலக்க பயன்படுத்தும் வேதிப்பொருளை மாதேஷூக்கும் வழங்கியதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து விருத்தாசலம் மதுவிலக்கு போலீஸாருக்கு இது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீஸார் விருத்தாசலத்தில் இருந்த ஜோதிமணி மற்றும் கேசவகுமாரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஜோதிமணி மற்றும் கேசவகுமார் ஆகிய இருவரும் வேதிப்பொருளை மாதேஷிடமிருந்து ஜிஎஸ்டி ரசீது இல்லாமல் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் விருத்தாசலம் மதுவிலக்கு போலீஸாரிடம் ஒப்படைத்த கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீஸார், வழக்குப் பதிவுசெய்து செய்து சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x