Published : 23 Jun 2024 05:13 PM
Last Updated : 23 Jun 2024 05:13 PM

ஒரே வாரத்தில் தமிழக மீனவர்கள் 22 பேர் கைது: ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

மீனவர்கள்

ராமேஸ்வரம்: மீன்பிடித் தடைக்காலம் முடிந்து ஒரே வாரத்தில் தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்கள் சிறைப்பிடிப்பை கண்டித்தும், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை தாயகம் திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுத்து வர வலியுறுத்தி நாளை (திங்கட்கிழமை) முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கிழக்கு கடற்கரைப் பகுதிகளான வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடல்களில் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரை இரண்டு மாத காலங்கள் மீன்களின் இனப்பபெருக்க காலமாக கணக்கிட்டு மீன்பிடித் தடைக்காலமாக மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

இந்த மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து கடந்த ஜுன் 15லிருந்து தமிழக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கச் சென்று வருகின்றனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நெடுந்தீவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜஸ்டின், ரெய்மெண்ட், ஹெரின் ஆகிய மூவருக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகளை எல்லை மீறி இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் கைப்பற்றி, படகுகளிலிருந்த 22 மீனவர்களை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 22 பேரும் படகுகளுடன் காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்ட செல்லப்பட்டனர்.

மீன்பிடி தடைக்காலத்தில் 2 மாதங்களாக தொழிலுக்குச் செல்லாமல், லட்சக்கணக்கான ரூபாய் செலவில் படகுகளை பழுது நீக்கி தொழிலுக்கு சென்ற அதே வாரத்தில் இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து 27 தமிழக மீனவர்களின் படகுகளை கைப்பற்றி 204 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மீனவர்கள் சிறைப்பிடிப்பை தொடர்ந்து ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்தில் மீனவ சங்க பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. மீனவர்கள் சிறைப்பிடிப்பை கண்டித்தும், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை தாயகம் திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுத்து வர வலியுறுத்தி நாளை (திங்கட்கிழமை) முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x