Last Updated : 23 Jun, 2024 04:38 PM

 

Published : 23 Jun 2024 04:38 PM
Last Updated : 23 Jun 2024 04:38 PM

கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளையும், நாளை மறுதினமும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் குடிதாங்கி, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 7 செமீ, நீலகிரி மாவட்டம் தேவாலா, பந்தலூரில் தலா 6 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தையில் தலா 5 செமீ, புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் 4 செமீ, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, கடலூர், விழுப்புரம் மாவட்டம் முகையூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், 25, 26 தேதிகளில் ஒருசில இடங்களிலும், 27 முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளையும், நாளை மறுதினமும் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் நாளை முதல் 27-ம் தேதி வரை சூறாவளிக்காற்று அதிகபட்சமாக 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x