Last Updated : 22 Jun, 2024 05:29 PM

 

Published : 22 Jun 2024 05:29 PM
Last Updated : 22 Jun 2024 05:29 PM

கள்ளச் சாராய வழக்கு விசாரணையில் எங்கள் பரிந்துரைகள் என்னென்ன? - தேசிய பட்டியலின ஆணைய இயக்குநர் விளக்கம்

தேசிய பட்டியலின ஆணைய இயக்குநர்

கள்ளக்குறிச்சி: கள்ளச் சாராய வழக்கில் கைதாகியுள்ள பட்டியலினம் அல்லாதவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என சிபிசிஐடி பிரிவுக்கு பரிந்துரைக்கப்படும் என தேசிய பட்டியலின ஆணைய இயக்குநர் எஸ்.ரவிவர்மன் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் அருந்தி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து தேசிய பட்டியலின ஆணைய இயக்குநர் ரவிவர்மன் கூறியது: “கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி விஷச் சாராயம் அருந்தி பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களைச் சந்தித்து, சிகிச்சை பெறுபவர்களுக்கு என்ன என்ன உதவிகள் தேவை என்பதுகுறித்து கேட்டறிந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளவே இங்கு வந்துள்ளோம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தியவர்களில் தற்போதுவரை 54 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும், பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கும் தமிழக அரசு நிவாரண உதவிகளை அறிவித்து வழங்கியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவர்களை நியமித்து, உயர் சிகிச்சையை அரசு வழங்கி வருகிறது.

பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள் எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் அவர்களுக்குத் தேவையான உதவிகள், தொடர் உயிரிழப்புகள் ஏற்படாமல் பாதுகாத்தல், மறுவாழ்வு கிடைப்பதை உறுதி செய்து தருவது எங்களுடைய பணியாகும்.அந்த வகையில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் பட்டியலினத்தவர்களாக உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் பட்டியலினத்தவராகவும், பாதிப்பை ஏற்படுத்தியவர் பட்டியலினத்தை சாராதவர் என்பதாலும் இந்த வழக்கை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் பரிந்துரைப்போம். எந்த ஊழியர் இந்தச் சம்பவத்துக்கு உறுதுணையாக இருந்தாரோ அவர் மீது தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும்.இந்தச் சம்பவத்தை சிபிசிஐடிவசம் ஒப்படைத்து விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆணையத்துக்கு வரையறுக்கப்பட்ட சட்ட விதிகளின்படி இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். விசாரணை அறிக்கை ஆணையத்தின் தலைவர் மற்றும் மத்திய அரசிடம் 2 நாள்களுக்குள் வழங்கப்படும்” என்றார் ரவிவர்மன். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x