Published : 21 Jun 2024 03:30 PM
Last Updated : 21 Jun 2024 03:30 PM

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விற்பனை மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? - உயர் நீதிமன்றம்

கோப்புப் படம்: எஸ்.எஸ்.குமார்

சென்னை: கள்ளக்குறிச்சி பகுதியில், கள்ளச் சாராய விற்பனை தொடர்பாக அரசுக்கு புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், கள்ளக்குறிச்சி, மரக்காணம் கள்ளச் சாராய பலிகள் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஜூன் 26-ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச் சாராய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரி அதிமுக வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை தாக்கல் செய்திருந்த பொது நல வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்வம், “இந்தச் சம்பவம், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தோல்வியடைந்து விட்டதையே காட்டுகிறது. தற்போது 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பலர் கண் பார்வை இழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு மரக்காணத்தில் இதேபோல, கள்ளச் சாராயம் குடித்து 30 பேர் பலியாகினர். அதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ-வும், மக்களும், காவல் துறையிடம் புகார் அளித்தனர். எம்எல்ஏ சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தங்கு தடையின்றி சாராய விற்பனை நடந்து வருகிறது.கருணாபுரம் பகுதியில் 500 மக்கள் வசித்து வரும் நிலையில், 300 பேர் வரை கள்ளச் சாராயத்தைக் அருந்தியுள்ளனர். அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.” என்று வாதிட்டார்.

இந்த வாதத்துக்கு பதிலளித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

மரக்காணத்தில் 2023-ம் ஆண்டு நடந்த சம்பவத்தில் 14 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 16 காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை முடிந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. 2021 ம் ஆண்டு எதிர்க்கட்சி ஆட்சியில் இதுபோல நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவத்தில் இதுவரை 47 பேர் பலியாகியுள்ளனர். இதுதொடர்பாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 117 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 89 பேரின் நிலைமை சீராக உள்ளதாகவும், மீதமுள்ளவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் கண்காணிப்பாளரும், மதுவிலக்கு பிரிவு அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்று வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 2023-ம் ஆண்டு மரக்காணம் சம்பவத்தை தொடர்ந்து, அரசின் கவனத்துக்கு இந்த விவகாரம் கொண்டு வந்த பிறகு, கடந்த ஓராண்டாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அந்த சம்பவத்தின் மூலம் ஏன் பாடம் கற்றுக் கொள்ளவில்லை? கள்ளச் சாராய விற்பனை தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், இந்த சம்பவத்துக்கு முன்பு, கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய விற்பனை நடந்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அப்போது மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் என்ன நடவடிக்கை எடுத்தது. அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பின்னர், கள்ளக்குறிச்சி, மரக்காணம் கள்ளச் சாராய பலிகள் தொடர்பான வழக்குகளில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 26-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x