Published : 01 Aug 2014 09:28 AM
Last Updated : 01 Aug 2014 09:28 AM

36,500 பேர் வருமானவரி கணக்கு தாக்கல்: பலர் இ-பைலிங் செய்ததால் நேரில் வருவது குறைந்தது

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு கவுன்ட்டர்கள் மூலம் மொத்தம் 36,500 பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்ட மக்களுக்கு 24 சிறப்பு கவுன்ட்டர்கள், காஞ்சிபுரம் - 2, தாம்பரம் 7 என மொத்தம் 33 சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டன. இது தவிர, பொது மக்களுக்கு ஆலோசனை வழங்கும் வகை யில் 3 உதவி மையங்கள் செயல் பட்டன.

கடந்த 26 மற்றும் 27-ம் தேதிகளில் 2,700 பேரும், 28-ம் தேதி 6,700 பேரும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தனர். 29-ம் தேதி ரம்ஜான் பண்டிக்கை என்பதால் விடு முறை விடப்பட்டது. 30-ம் தேதி 13,100 பேர் தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் வழக்கத்தை விட, மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

ஒரே நாளில் 14,000 பேர்

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோரின் வசதிக்காக சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு இருந்தன. ஆன்லைனில் கணக்கு தாக்கல் செய்ய தனியார் உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு மையத்திலும் ஏராளமானோர் கணக்கை சமர்ப்பித்தனர். வியாழக்கிழமை மட்டுமே 14,000 பேர் தாக்கல் செய்துள்ளனர். இந்த சிறப்பு கவுன்ட்டர்கள் மூலம் மொத்தம் 36,500 பேர் தாக்கல் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டில் 50 ஆயிரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

50% பேர் இ பைல் செய்தனர்

வருமான வரி கணக்கை ஆன்லைனில் (இ பைலிங்) தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், வருமான வரி தலைமை அலுவலகத்தில் கடந்த ஆண்டை விட கூட்டம் குறைவாகவே இருந்தது.

இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அனைத்து துறைகளிலும் கணினி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மக்களுக்கு விரைவான சேவை கிடைக்கிறது. மேலும், அவர்களின் வீண் அலைச்சலை தவிர்த்து, நேரத்தையும் சேமிக்க முடியும். அதேபோல், வருமான வரி கணக்கை ஆன்லைனில் செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இதுபோன்ற முகாம்களை நடத்தும்போது, நீண்ட வரிசை இருக்கும். ஆனால், இப்போது அப்படியில்லை. பெரும்பாலானோர் தங்களது கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்து விடுகின்றனர்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x