Last Updated : 20 Jun, 2024 04:48 PM

3  

Published : 20 Jun 2024 04:48 PM
Last Updated : 20 Jun 2024 04:48 PM

கள்ளச் சாராய மரணம்: ரூ.25 லட்சம் நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: பாமக கோரிக்கை

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கள்ளச்சாரயம் குடித்து  சிகிச்சை பெறுபவர்களை விக்கிரவாண்டி தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி, வழக்கறிஞர் பாலு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

விழுப்புரம்: கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதை ரூ.25 லட்சமாக உயர்த்தி கொடுத்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றை வழங்க வேண்டும்” என்றார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்தவர்களில் கருணாபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார்(40) சுப்பிரமணி(60) ஆகிய இருவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை இன்று பிற்பகல் 12.30 மணியளவில் விக்கிரவாண்டி தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி, வழக்கறிஞர் பாலு, மாவட்ட தலைவர்கள் தங்கஜோதி, புகழேந்தி, அமைப்பு செயலாளர்கள் பழனிவேல், மணிமாறன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

பின்னர் பாமக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களிடம் பேசுகையில், “கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்தவர்களில் இதுவரை 36 பேர் இறந்துள்ளனர்.இருவர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்சாராயம் விற்பனை மலைபகுதியில் அல்ல. நகரத்தில் மையப்பகுதியில் உள்ள கருணாபுரம் என்ற பகுதியில், அதுவும் நீதிமன்றத்தின் அருகில் விற்பனை நடந்துள்ளது.

அங்கு கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராசு என்கிற சாராய வியாபாரி விற்றுள்ளார். இவருக்கு திமுக எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், அமைச்சர்கள் வேலு, முத்துசாமி உள்ளிட்ட ஆளும் கட்சியினர் பின்னனியில் இருந்துள்ளனர். ஏற்கனவே மரக்காணம் கள்ளச் சாராய சாவில் சாராய வியாபாரி மருவூர் ராஜா என்பவருக்கு அமைச்சர் மஸ்தான் அரசியல் பின்னனியில் இருந்தார். போலீஸார் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்களை இடமாற்றம் செய்கின்றனர் .

போலீஸாரை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. ஆனால் ஆட்சியர் இது கள்ளச் சாராய சாவு அல்ல வயிற்று வலியினால் ஏற்பட்ட மரணம் என்று தவறான தகவலை கூறியுள்ளார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட அமைச்சர்களை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். முதல்வர் இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும்.

தமிழக அரசு இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதை ரூ.25 லட்சமாக உயர்த்தி கொடுத்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றை வழங்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x