Published : 20 Jun 2024 10:51 AM
Last Updated : 20 Jun 2024 10:51 AM

“கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்” - திருச்சி சூர்யா, கல்யாணராமனை நீக்கியது தமிழக பாஜக

திருச்சி சூர்யா

சென்னை: கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக கூறி, திருச்சி சூர்யா, கல்யாணராமன் இருவரையும் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக பாஜக அறிவித்துள்ளது. அதிலும், கல்யாணராமன் ஒரு வருடத்துக்கு அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி சூர்யா நீக்கம் தொடர்பாக தமிழக பாஜக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின் படி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்.

ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கல்யாண ராமன் நீக்கம் குறித்த அறிவிப்பில், “சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு மாநில தலைமையினை பற்றியும், கட்சிக்காக பணியாற்றுபவர்கள் மீதும் தகுந்த ஆதாரங்கள் இன்றி சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருகிறார்.

இது கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலாக இருப்பதால் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின்படி கல்யாணராமன் கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் 1 வருடத்திற்கு நீக்கப்படுகிறார்.

ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மற்றொரு விவகாரத்தில் திருச்சி சூர்யா ஏற்கெனவே கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு மீண்டும் இணைந்த நிலையில் தற்போது மீண்டும் நீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x