Published : 20 Jun 2024 04:49 AM
Last Updated : 20 Jun 2024 04:49 AM

தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் ஜூன் 22, 23-ல் மிக கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் 22, 23-ம் தேதி மிகக்கனமழையும், சில மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களிலும், 22, 23-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும், 24, 25-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி,மின்னலுடன் லேசானது முதல்மிதமான மழை பெய்யக்கூடும்.

22-ம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனிமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

23-ம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல்மிகக் கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

தேவாலாவில் 13 செமீ: நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தேவாலாவில் 13 செமீ, ராணிப்பேட்டை மாவட்டம்ஆற்காடில் 11 செமீ, நீலகிரி மாவட்டம் பந்தலூர், புதுக்கோட்டை மாவட்டம் ஆயிங்குடி ஆகிய இடங்களில் தலா 10 செமீ, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், சென்னை திருவொற்றியூர் ஆகியஇடங்களில் தலா 9 செமீ, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா, பனப்பாக்கம், சென்னை அண்ணாநகர், நுங்கம்பாக்கம், ராயபுரம், தேனாம்பேட்டை, திரு.வி.க.நகர், கடலூர்மாவட்டம் வடகுத்து, புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தை ஆகிய இடங்களில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் இன்று மழை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில், இடி,மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும், மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளில் 21 முதல் 23-ம் தேதி வரையும் அதிகபட்சமாக 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x