Published : 19 Jun 2024 03:54 PM
Last Updated : 19 Jun 2024 03:54 PM

நீட் தேர்வு: மத்திய அரசைக் கண்டித்து ஜூன் 24-ல் திமுக மாணவரணி கண்டன ஆர்ப்பாட்டம் @ சென்னை

சென்னை: எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், நீட் தேர்வை நடத்தியே தீருவேன் என்ற எதேச்சதிகாரப் போக்கினை கடைபிடிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் வரும், ஜூன் 24ம் தேதி அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும், என்று அக்கட்சியின் மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பாஜக அரசு நீட் தேர்வினை 2017-இல் கொண்டு வந்தது முதல் திமுக கடுமையாக எதிர்த்து வந்தது. தமிழகத்திலுள்ள முற்போக்கு சிந்தனை கொண்ட அத்தனை அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வந்தது.

அப்போதெல்லாம் பாசிச பாஜக அரசு திமுக மட்டும் தான் நீட் தேர்வை எதிர்கிறது என்றும்; தமிழகம் மட்டும் தான் நீட் தேர்வை வேண்டாம் என்று சொல்கிறது என்றும் விமர்சித்து வந்தது. திமுகவின் போராட்டங்களை விளம்பர அரசியல் என்றெல்லாம் சொல்லி குற்றம் சாட்டியது. அதற்கு பதிலடி தரும் வகையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், தமிழகம் தான் சமூகநீதியின் தொட்டில்.

சமவாய்ப்பு, சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றிற்கு எதிரான நீட் தேர்வை இந்தியாவில் தமிழகம் தான் முதலில் எதிர்க்கும் என்பதில் எந்த ஐயமில்லை என்று தெரிவித்து, என்றைக்கும் நீட் தேர்வை எதிர்த்தே தீர வேண்டுமென்று சென்னார். ஆனால், இன்று நீட் தேர்வில் உள்ள மோசடிகள் மற்றும் குளறுபடிகளை உணர்ந்த பாஜகவை சேராத அரசியல் கட்சிகள், பிற மாநில அரசுகள், ஏன் ஒட்டுமொத்த இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு கல்வியாளர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் நீட் தேர்வை கடுமையாக எதிர்க்க தொடங்கி விட்டனர். நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் தொடங்கிய அதிர்வலைகள் இன்று இந்தியா முழுவதும் பரவியிருப்பதை காண முடிகிறது.

நீட் தேர்வில் நடைபெற்ற மோசடிகளால் இந்தியா முழுவதும் எதிர்ப்பலை கிளம்பியுள்ளது. நீட் தேர்வு என்பதே பெரும் மோசடி என்பதைத் தான் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி அதனை கடுமையாக எதிர்த்து வருகிறார். நீட் தேர்வே தமிழகத்துக்கு தேவையில்லை என்பதற்காக நிறைவேற்றி அனுப்பியிருக்கும் சட்டமசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டுமென்றும், நீட் தேர்வில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய மோசடிகளை, குளறுபடிகளை களைவதற்கு மேல்நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், நீட் தேர்வை நடத்தியே தீருவேன் என்ற எதேச்சதிகாரப் போக்கினை கடைபிடிக்கும் மத்திய பாசிச பாஜக அரசை கண்டித்து திமுக மாணவர் அணிச் சார்பில் வரும், ஜூன் 24ம் தேதி அன்று காலை 9 மணியளவில், சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், திமுக மாணவர் அணியின் நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் அவர்களது தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று, போராட்டத்தை வெற்றியடையச் செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x