Last Updated : 19 Jun, 2024 03:10 PM

 

Published : 19 Jun 2024 03:10 PM
Last Updated : 19 Jun 2024 03:10 PM

நடிகர் விஜய் 50-வது பிறந்தநாள்: தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்க தவெக நிர்வாகிகள் முடிவு

நடிகர் விஜய்

சென்னை: நடிகர் விஜயின் 50-வது பிறந்தநாளை ஒட்டி, தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கின்றனர். இதற்கான முன்னேற்பாடு பணிகளை தற்போதே கட்சி நிர்வாகிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர்களை சேர்ப்பது, கட்சி நிர்வாகிகளை நியமிப்பது, அவர்களை தொடர்ந்து சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்குவது என கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில், தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ - மாணவியருக்கு வரும் 28-ம் தேதி மற்றும் ஜூலை 3-ம் தேதி ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக நேரில் சந்தித்து பரிசுகளை வழங்க இருக்கிறார்.

இதற்கிடையில், நடிகர் விஜய் தனது 50-வது பிறந்தநாளை வரும் 22-ம் தேதி கொண்டாடுகிறார். கட்சி தொடங்கிய பிறகு முதன்முதலாக கட்சி தலைவராக நடிகர் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாட இருப்பதால், தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும், தமிழகம் முழுவதும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, தவெக சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, விஜய் பிறந்தநாளுக்கு முந்தைய நாளில் இருந்தே பல இடங்களில் நலத்திட்ட உதவிகளை நிர்வாகிகள் வழங்க இருக்கின்றனர்.

அந்தவகையில், தென் சென்னை மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் க.அப்புனு தலைமையில் 21-ம் தேதி தி.நகரில் மகளிருக்கு புடவை, ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனர்.

மேலும், விஜய் பிறந்தநாளான 22-ம் தேதி சென்னையில் கோயில்களில் சிறப்பு பூஜைகளுக்கு விஜய் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருக்கின்றனர். அதேபோல், சென்னை கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல அரசு மருத்துவமனையில் ஜூன் 22-ம் தேதி பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்க தவெக தென் சென்னை மாவட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விருகம்பாக்கம், ஆயிரம் விளக்கு, சேப்பாகம்-திருவல்லிக்கேணி பகுதியில் அன்னதானம், கோயம்பேடு ரோகினி திரையங்கம் அருகில் ரத்த தானம், கிளை அலுவலகங்கள் திறப்பு என தென் சென்னை மாவட்டம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மத்திய சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் மேற்கு பகுதி தலைவர் விஎஸ்டி.விசு தலைமையில், மாவட்ட தலைவர் பூக்கடை எஸ்.கே.எம்.குமார் முன்னிலையில் திருவேங்கடையா தெருவில் மாபெரும் கண் தானம் முகாமும் நடத்துகின்றனர்.

இதில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கண் தானம் வழங்க முடிவு செய்துள்ளனர். அதேபோல், சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் அம்பத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிள், பெண்களுக்கு தையல் இயந்திரம், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரண பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்க உள்ளனர்.

இதேபோல், தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் தவெக நிர்வாகிகள் கண் தானம், ரத்த தானம், அன்னதானம் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க தயாராகி வருகிறார்கள். விஜய்யின் 50-வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாக கொண்டாடுவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை நிர்வாகிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x