Last Updated : 18 Jun, 2024 06:47 PM

 

Published : 18 Jun 2024 06:47 PM
Last Updated : 18 Jun 2024 06:47 PM

கால அவகாசம் நிறைவு: தமிழகத்தில் வெளி மாநில ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு

மதுரை: தமிழகத்துக்குள் விதிகளை மீறி இயக்கப்படும் பிற மாநில ஆம்னி பேருந்துகளை உடனடியாக பறிமுதல் செய்ய போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1,535 ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் பதிவு செய்து முறையாக இயக்கப்படுகிறது. இது தவிர பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட 943 ஆம்னி பேருந்துகளும் தமிழகத்துக்குள் இயக்கப்படுகின்றன. இந்த ஆம்னி பேருந்துகள் பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று தமிழகத்துக்குள் விதிகளை மீறி இயக்கப்படுகின்றன. இதனால் ஒரு பேருந்துக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.4,32,000 வீதம் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. இப்பேருந்துகளின் உரிமையாளர்கள் நாகாலாந்து உள்ளிட்ட பிற மாநிலங்களின் தவறான ஆதாரங்களை சமர்பித்து பதிவெண் பெற்று தமிழகத்துக்குள் விதிகளுக்கு புறம்பாகவும், முறைகேடாகவும் இயக்கி வருகின்றனர்.

இதை ஒழுங்குப்படுத்த போக்குவரத்து ஆணையரகம் சார்பில் வெளிமாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு 3 முறை கால அவகாச நீட்டிப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் மொத்தம் உள்ள 905 வெளி மாநில பதிவெண் கொண்ட பேருந்துகளில் 105 ஆம்னி பேருந்துகள் மட்டுமே முறையே தங்களது பிற மாநிலப் பதிவெண்ணை ரத்து செய்து தமிழகத்தில் மறுபதிவு செய்து முறையான அனுமதிச் சீட்டு பெற்று இயக்க ஆரம்பித்துள்ளனர்.எஞ்சிய 800 வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்துக்குள் முறைகேடாக, சட்டத்துக்கு புறம்பாக இயக்குவதை நிறுத்தவில்லை. இந்த பேருந்துகளால் ஆண்டுக்கு அரசுக்கு குறைந்தபட்சம் ரூ.34.56 கோடி நிதி இழப்பு ஏற்படுகிறது.

இந்த வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் பயணக் கட்டணங்களை வெகுவாகக் குறைத்து இயக்குவதால், அரசு பேருந்துகளுக்கும், முறையாக இயக்கப்படும் இதர ஆம்னி பேருந்துகளுக்கும் கடுமையான நிதி இழப்பு ஏற்படுகிறது. இந்த பிற மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் விபத்துகளில் சிக்கும்போது, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்காது. இதையடுத்து, தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக இயக்கப்படும் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இன்று முதல் பறிமுதல் செய்ய போக்குவரத்து அதிகாரிகளுக்கு மாநில போக்குவரத்து சாலை பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக போக்குவரத்துறை அனைத்து மண்டல அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு (சோதனைச் சாவடிகள் மற்றும் செயலாக்கப் பிரிவில் பணிபுரிபவர்கள் உட்பட) பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் முறைடோகவும், சட்டத்துக்கு புறம்பாகவும் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது. வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களின் மீதும் அவர்கள் முறைகேடாக எவ்வாறு பிற மாநிலங்களில் போலி ஆவணங்கள் கொடுத்து பதிவெண், அனுமதி சீட்டு பெறுகிறார்கள் என்பது தொடர்பாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் இன்று முதல் அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு விதிகளுக்கு புறம்பாக தமிழகத்துக்குள் இயக்கப்படும் அனைத்து ஆம்னி பேருந்துகளையும் உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும்.விதிகளை மீறி இயக்கப்படும் வெளிமாநில ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டாம். விதிகளை மீறி இயக்கப்படும் பிற மாநில ஆம்னி பேருந்துகளின் விவரங்கள் www.tnsta.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிற மாநில ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் முன்பதிவு செய்திருந்தால் அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இப்பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு அரசு பொறுப்பேற்காது. சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களிடம் தான் பாதிப்புக்கான நிவாரணத்தை பெற முடியும்.

தமிழகத்தில் முறையான அனுமதியுடன் 1,535 ஆம்னி பேருந்துகள் இயங்குவதால் பொதுமக்களின் பயணத்துக்கு இடையூறு ஏற்படாது. இரவு நேரங்களில் அனுமதி பெறாத பிற மாநில ஆம்னி பேருந்துகளில் இறக்கிவிடப்படும் பயணிகளை அவர்களின் ஊர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம், அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் போக்குவரத்துறை மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போ்ககுவரத்து அலுவலர்கள் தொடர்புகொண்டு உரிய மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று அகில இந்திய சுற்றுலா விதிகளின்படி இயங்கும் ஆம்னி பேருந்துகள் தொடர்ந்து இங்குவதற்கு எந்த தடையும் இல்லை. அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளை மீறி இயக்கப்படும் பிற மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் மட்டுமே பறிமுதல் செய்யப்படும், என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x