Published : 18 Jun 2024 06:46 AM
Last Updated : 18 Jun 2024 06:46 AM

நாட்டின் பால் உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 4.57 சதவீதம்: தமிழக அரசு பெருமிதம்

சென்னை: நாட்டின் பால் உற்பத்தியில் தமிழகம் 4.57 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்தியாவிலேயே வாடிக்கையாளர்களுக்கு பால் அட்டை மூலம் குறைந்த விலையில் பால் விநியோகம் செய்யப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உலகளவில் அதிக அளவிலானபால் உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாக திகழும் வேளையில், நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில், தமிழகம் 4.57 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. தமிழ்நாடு பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டில் தற்போது கிராம அளவில் மொத்தம் 10,814 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன.

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பால் அட்டைகள் மூலம் குறைந்த விலையில் பால் விநியோகமானது சீரான முறையிலும் நேர்த்தியானமுறையிலும் மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளில் பால் வளத்துறையை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு திட்டங்கள் திறம்படசெயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் இயங்கிவரும்9,189 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக நாள்தோறும் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது நாளொன்றுக்கு 35.67 லட்சம் லிட்டர் பால் சங்க அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் 4 லட்சம் லிட்டர் பால்உள்ளூர் தேவைக்காக சங்கங்கள் மூலம் விற்பனை செய்ததுபோக,31.67 லட்சம் லிட்டர் பால் 27 மாவட்டகூட்டுறவு ஒன்றியங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.

ஊக்கத் தொகை: பால் கொள்முதலை அதிகரிக்கும் வகையி்ல பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த 2023-ம் ஆண்டுடிச.18-ம் தேதி முதல் கொள்முதல் செய்யப்படும் பசும்பால் மற்றும் எருமை பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் வரையிலான காலத்துக்கு ரூ.108.30 கோடிஊக்கத் தொகையாக பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2023-2024-ம் ஆண்டில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் மின்னணு மற்றும் இணையவழி வணிகம்மூலம் சுமார் ரூ.30.19 கோடி வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்திய தேசிய கூட்டுறவு பால் பண்ணைகளின் இணையம் மூலம் 2021-22-ம் ஆண்டு ஆவின் நிறுவனத்தின் பால் மற்றும் பால் பொருள்களை மின்னணு மூலமாக ரூ.590 கோடிக்கு பரிவர்த்தனை மேற்கொண்டதற்காக ஆவின் நிறுவனத்துக்கு இந்திய அளவில் இரண்டாமிடத்துக்கான விருது வழங்கப்பட்டு பாராட்டப்பட்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x