Published : 15 Jun 2024 05:26 AM
Last Updated : 15 Jun 2024 05:26 AM

வங்கி அதிகாரிகளின் விவரங்களை கோரிய செந்தில் பாலாஜியின் மனுக்கள் தள்ளுபடி: விடுவிக்கக் கோரும் மனு மீது 19-ல் உத்தரவு

கோப்புப்படம்

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்திருந்தது.

இதற்கிடையே, வழக்கு தொடர்பான வங்கி அசல் ஆவணங்களை வழங்கக் கோரியும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறப்படும் காலகட்டத்தில் சிட்டி யூனியன் வங்கி மற்றும் கரூர் வைஸ்யா வங்கிகளில் பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் விவரங்களை வழங்க வேண்டும் என்றும், தனது மனைவி மற்றும் தன்னுடைய வங்கி கணக்குகளில் பணம் டெபாசிட் செய்தவர்களின் பான் கார்டு விவரங்களை வழங்க வேண்டும் என்றும், அதுவரை அமலாக்கத் துறை வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனவும் கோரி செந்தில் பாலாஜி மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை முதன்மை நீதிபதி எஸ்.அல்லி முன்பாக நேற்று நடந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.கவுதமன்,அமலாக்கத் துறையால் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணங்களில் ஒருசில ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளன, என குற்றம்சாட்டினார்.

அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் நிலையில், குற்ற விசாரணை முறைச்சட்டம் பிரிவு 91-ன் பிரகாரம் வழக்குதொடர்பான ஆவணங்களை வழங்கக் கோரி மனுக்களை தாக்கல் செய்ய முடியாது என்பதால், இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவேஇந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும், என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.அல்லி, இந்தவழக்கு தொடர்பான வங்கி ஆவணங்கள் மற்றும் தனியார்வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நேற்றுடன் ஓராண்டு முடிவு: மேலும், அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதுஜூன் 19 அன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார். புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலையும் ஜூன் 19 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நேற்றுடன் ஓராண்டு முடிவடைகிறது. இருப்பினும் அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x