Published : 13 Jun 2024 09:59 PM
Last Updated : 13 Jun 2024 09:59 PM

பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு முடிவெட்ட மறுத்த வழக்கு: தந்தை, மகனுக்கு ஐகோர்ட் ஜாமீன்

சென்னை: பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு முடிவெட்ட மறுத்ததாக பதியப்பட்ட வழக்கில், சலூன் கடை நடத்தும் தந்தை, மகனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த கீரைப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த யோகேஷ்வரன் மற்றும் அவரது தந்தை கருப்பன் ஆகிய இருவரும் சலூன் கடை நடத்தி வருகின்றனர். இவர்களின் கடைக்கு கெளப்பாறை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் முடிவெட்ட சென்றுள்ளார்.

அப்போது, சஞ்சய்யின் ஊரை விசாரித்த யோகேஷ்வரன் கெளப்பாறையைச் சேர்ந்தவர்களுக்கு இங்கு முடி வெட்ட முடியாது எனக்கூறியதாக சஞ்சய், அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சலூன் கடை நடத்தும் யோகேஷ்வரன் மற்றும் அவரது தந்தை கருப்பன் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம். தண்டபாணி முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், தங்களது கடைக்கு வரும் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் முடிவெட்டி வருவதாகவும், புகார்தாரரான சஞ்சய்க்கு முடிவெட்ட மாட்டோம் என நாங்கள் கூறவில்லை என்றும், சிறிதுநேரம் காத்திருக்கும்படிதான் தெரிவித்தோம். அதற்குள் தங்களுக்கு எதிராக புகார் அளித்து விட்டார் என்றும் வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி, இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x