Published : 13 Jun 2024 01:22 PM
Last Updated : 13 Jun 2024 01:22 PM

சென்னையில் மழைநீர் வடிகால்களில் 125 கி.மீ நீளத்துக்கு தூர் வாரும் பணி நிறைவு

தூர்வாரும் பணி

சென்னை: சென்னை மாநகராட்சி எல்லைக்குள் 125 கி.மீ நீளத்துக்கு மழைநீர் வடிகால்களில் தூர் வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதோடு, அனைத்திலும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 2 ஆயிரத்து 624 கி.மீ நீள மழைநீர் வடிகால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவை, ஓட்டேரி நல்லா, கொடுங்கையூர் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் போன்றவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.

மழைக் காலங்களில் மாநகரில் பெய்யும் மழைநீரை வடிய செய்வதில் இந்த மழைநீர் வடிகால்களும், கால்வாய்களும் முக்கிய பங்காற்றுகின்றன. இந்நிலையில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கடந்த மாதம் 23-ம் தேதி முதல் மழைநீர் வடிகால்களில் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையிலும் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சி பராமரித்து வரும் 2 ஆயிரத்து 624 மழைநீர் வடிகால்களில் கடந்த ஆண்டு 1,731 கி.மீ நீளத்துக்கு தூர்வாரப்பட்டு, மழை நீர் இடையூறு இன்றி வழிந்தோடுவது உறுதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைநீர் வடிகால்களில் நீர் வெளியேறாமல் தேங்கும் இடங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் 724 கி.மீ நீள மழைநீர் வடிகால்கள் நல்ல நிலையில் இருப்பதும், 1,900 கி.மீ நீளத்துக்கு தூர் வார வேண்டி இருப்பதும் தெரியவந்துள்ளது. அதன்படி, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக தூர் வார திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 845 கி.மீ நீளத்துக்கு தூர் வாரும் பணி அனைத்து மண்டலங்களிலும் நடைபெற்று வருகின்றன. இதில் ஜூன் 12-ம் தேதி வரை 125 கி.மீ நீளத்துக்கு தூர் வாரப்பட்டுள்ளது.

இந்த மழைநீர் வடிகால்களை ஒட்டி, 90 ஆயிரத்து 168 வண்டல் வடிகட்டி தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 87 ஆயிரத்து 729 தொட்டிகளில் தூர் வார திட்டமிடப்பட்டு, இதுவரை 40 ஆயிரத்து 264 தொட்டிகளில் தூர்வாரப்பட்டுள்ளன. அதேபோல் மாநகராட்சி சார்பில் 33 கால்வாய்கள் 53.42 கி.மீ நீளத்துக்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. அனைத்திலும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இதில் தலா 2 பெரிய ஆம்பிபியன், சிறிய ஆம்பிபியன் இயந்திரங்கள், 4 ரோபோடிக் எஸ்கவேட்டர் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகளை அக்டோபர் மாதத்துத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x