Published : 12 Jun 2024 10:53 AM
Last Updated : 12 Jun 2024 10:53 AM

பக்ரீத்: தொடர் விடுமுறையை முன்னிட்டு 1,300 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு

சிறப்பு பேருந்து | கோப்பு படம்

சென்னை: பக்ரீத் பண்டிகை மற்றும் முகூர்த்த நாளையொட்டி சென்னையில் இருந்து 1,300 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் 15,16 தேதிகள் வார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு-முகூர்த்தம்), ஜூன் 17 பக்ரீத் பண்டிகை என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜூன் 14, 15, 16 தேதிகளில் 1,270 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை, கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு ஜூன் 14, 15 தேதிகளில் 30 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இவ்வாறு சென்றவர்கள் ஊர் திரும்ப ஜூன் 17-ம் தேதி பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 705 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அன்றைய தினம் பல்வேறு இடங்களில் இருந்து பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இப்பேருந்துகளை www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறப்புப் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் பயணிக்க சுமார் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x