Last Updated : 09 Jun, 2024 02:21 PM

22  

Published : 09 Jun 2024 02:21 PM
Last Updated : 09 Jun 2024 02:21 PM

“நீட் தேர்வுக்கு முதல் எதிர்ப்பு” - ஏ.கே.ராஜன் அறிக்கையை பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் பதிவு

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: “திமுகதான் நீட்தேர்வின் தீமைகளை கண்டறிந்து முதன் முதலில் அதை எதிர்த்து பரப்புரை செய்தது” என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவு: “திமுகதான் நீட்தேர்வின் தீமைகளை முதன்முதலில் கண்டுணர்ந்து, பெரிய அளவில் அதற்கெதிராக பரப்புரை மேற்கொண்டது. ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை மேற்கொள்வதால் ஏற்படும் தாக்கங்களை ஆராய, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்தோம்.

அக்குழு மிக விரிவான தரவுப் பகுப்பாய்வுகள், மாணவர்கள், பெற்றோர், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கிய அறிக்கை வெளியிடப்பட்டது. நீட் தேர்வு ஏழைகளுக்கும், சமூகநீதிக்கும் எதிரானது என்பதை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பிற மாநில அரசுகளுக்கும் அந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த அறிக்கையில் இடம்பெற்ற பரிந்துரைகளின் அடிப்படையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஏற்படுத்திய தேவையற்ற தாமதத்தையடுத்து, தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. நீட் தேர்வில் அண்மையில் நடந்த பரவலான குளறுபடிகளால், நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த வேளையில், நீட் தேர்வின் பாதகங்களை அனைத்துத் தரப்பினரும் அறிந்துகொள்ள ஏதுவாக, நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையை ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் பகிர்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x