Published : 08 Jun 2024 04:23 AM
Last Updated : 08 Jun 2024 04:23 AM

சட்டப்பேரவை ஜூன் 24-ல் மீண்டும் கூடுகிறது: பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் துறைகள் வாரியாக மானிய கோரிக்கை விவாதத்துக்காக சட்டப்பேரவை வரும் ஜூன் 24-ம் தேதிமீண்டும் கூடுவதாக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டுமுதல் கூட்டம் கடந்த பிப். 12-ம் தேதிஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்.15-ம்தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. நிறைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விவாதத்துக்கு பதில் அளித்தார். இதையடுத்து, இந்த 2024-25 நிதி ஆண்டுக்கான பொதுபட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு பிப்.19-ம் தேதியும், வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பிப்.20-ம்தேதியும் தாக்கல் செய்தனர். அதன்பிறகு, பட்ஜெட்கள் மீதான விவாதம் பிப்.22-ம் தேதி வரை நடைபெற்றது. நிறைவு நாளில் நிதி மற்றும் வேளாண்துறை அமைச்சர்கள் விவாதத்துக்கு பதில் அளித்து பேசினர்.

வழக்கமாக பட்ஜெட்டை ஒட்டி, துறைகள் வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடத்தப்பட்டு, அந்தந்த துறைகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும். ஆனால், மக்களவை தேர்தல்அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில், மானிய கோரிக்கை விவாதம் தொடர்ந்து நடத்தப்படவில்லை. பேரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 6-ம் தேதி இரவுடன் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பேரவைத் தலைவர் மு.அப்பாவு செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர், ‘‘ஜூன் 24காலை 10 மணிக்கு துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதக் கூட்டத்தொடர் தொடங்கும். இந்த கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்றும், எந்தெந்த நாட்களில் எந்தெந்த துறைகள் மீதான விவாதம் நடைபெறும் என்றும் ஜூன் 24 -ம் தேதிக்கு ஒரு வாரம் முன்னதாகவோ அல்லது 10 நாட்களுக்கு முன்போ அலுவல் ஆய்வு குழு கூடி முடிவெடுக்கும்’’ என்றார்.

இதையடுத்து, பேரவைச் செயலர் கி.சீனிவாசன் வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை ஜூன் 24-ம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தலைமைச்செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார்’ என அறிவித்துள்ளார்.

மகளிர் உரிமை தொகையில் பயனாளிகள் எண்ணிக்கையை உயர்த்துவது, தமிழ்ப்புதல்வன் திட்டம் உள்ளிட்டபல்வேறு திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள், புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இக்கூட்டத்தொடரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x