Published : 08 Jun 2024 04:18 AM
Last Updated : 08 Jun 2024 04:18 AM

திமுக புதிய எம்.பி.க்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட திமுக எம்.பி.க்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.

நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல் கட்டத்தில் தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கும் ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து, ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இதையடுத்து, தமிழக மக்கள், திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஜூன் 4-ம் தேதி இரவே நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, கடந்த 6-ம் தேதி மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்களை முதல்வர் சந்தித்தார். அப்போது முதல்வருக்கு எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும், எம்.பி.க்களுக்கு முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிலையில், திமுகவின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். புதிய எம்.பி.க்கள் அனைவரும் இக்கூட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மக்களவையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும், மக்களவை உறுப்பினர்களின் பணிகள் குறித்தும் முக்கிய அறிவுறுத்தல்களை முதல்வர் இக்கூட்டத்தில் வழங்குவார் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x