Last Updated : 07 Jun, 2024 02:08 PM

 

Published : 07 Jun 2024 02:08 PM
Last Updated : 07 Jun 2024 02:08 PM

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்

சென்னை: தமிழகத்தில் திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட புதிய எம்பி-க்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல் கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து, ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி கைப்பற்றியது.

இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள், திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு ஜூன் 4-ம் தேதி இரவே நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பி-க்களை முதல்வர் சந்தித்தார். அப்போது முதல்வருக்கு எம்பி-க்களும் கூட்டணிக் கட்சி தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர். எம்பி-க்களுக்கு முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்நிலையில், திமுக எம்பி-க்கள் கூட்டம் நாளை மாலை 6.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட புதிய எம்பி-க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

இக்கூட்டத்தில், மக்களவையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் மக்களவை உறுப்பினர்கள் பணிகள் குறித்தும் அறிவுறுத்தல்களை முதல்வர் வழங்குவார் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x